எபிரேயர் 4 : 1-11                                 25 ஆகஸ்ட் 2025, திங்கள்

“எவனும் கீழ்ப்படியாமையைக் காண்பித்து விழுந்துபோகாதபடிக்கு, இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க விடாமுயற்சியாயிருப்போமாக.” – எபிரேயர் 4 : 11

நம் வாழ்வில் பல துறைகளில் கவனமாய் இருக்க தவறிப்போகிறோம். எபிரேயர் நிருபத்தின் ஆக்கியோன், “இளைப்பாறுதலில் பிரவேசிக்க கவனமாயிருக்கக்கடவோம்” என்று நமக்கு அறிவுறுத்துகிறார். எபிரேயர்களின் சூழலில், “இளைப்பாறுதல்” என்பது கடவுளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைப்பதால் வரும் ஆன்மீக ஓய்வைக் குறிக்கிறது. இது வெறும் சரீர ஓய்வு அல்ல, ஆனால் கிறிஸ்துவின் உயிர்தெழுதலினால் பாதுகாக்கப்படும் நமது இரட்சிப்பினால் வரும் ஆழ்ந்த, ஆன்மா-இளைப்பாறுதலாகும். ஆதாமும் ஏவாளும் ஏதேனில் கடவுளில் அனுபவித்த இளைப்பாறுதல், கானான் தேசத்தில் இஸ்ரவேலர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இளைப்பாறுதல், இப்போது கிறிஸ்துவின்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இருப்பினும் இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் கடவுளின் அற்புதங்களைக் கண்டும், வாக்குறுதிகளைப் பெற்றும் கீழ்ப்படியாமை மற்றும் அவிசுவாசத்தின் காரணமாக கடவுளின் இளைப்பாறுதலில் நுழையத் தவறிவிட்டனர். ‘கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க கவனமாயிருக்கக்கடவோம்’ என்பதின்படி அதே கீழ்ப்படியாமை மற்றும் அவிசுவாசத்திற்கு எதிராக வாழ நம்மைக் காத்துக்கொள்வோம்.

இளைப்பாறுதலில் பிரவேசிக்க கவனமாயிருக்கக்கடவோம் என்பது கடவுளின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நம் வாழ்க்கையை சீரமைப்பது மற்றும் அவருடைய வாக்குறுதிகளை உறுதியாகப் பற்றிக்கொள்வதாகும். பயணம் கடினமாக இருந்தாலும், நம்முடைய சுய பலத்தினால் முயற்சி செய்வது அல்ல, மாறாக ஆண்டவர் நம்மை இளைப்பாறுதலில் கொண்டு சேர்ப்பார் என்று விசுவாசத்தில் விடாமுயற்சியுடன் இருப்பதுதான்.

நாம் காத்திருக்கும் இளைப்பாறுதல் என்பது அவருடைய கிருபை போதுமானது என்றும், அவருடைய வாக்குறுதிகள் உண்மை என்றும், அவருடைய அன்பு மாறாதது என்றும் நம்பி நமது எதிர்காலம் கிறிஸ்துவில் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையுடன் நிகழ்காலத்தில் வாழ்வதைக் குறிக்கிறது. இந்த நிச்சயத்தில் வாழ்வோம், மறுமையில் நித்திய இளைப்பாறுதலில் பிரவேசிப்போம்.

நித்திய வாழ்வின் அதிபதியே, உமது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு இயேசுவிடம் விசுவாசம் வைத்து வாழ்வின் எல்லா நிலையிலும் துறையிலும் நிச்சயத்தோடு வாழ அருள்செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.