சங்கீதம் 130 : 1-5                            12 ஆகஸ்ட், 2021 வியாழன்

“கர்த்தருக்குக் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து என் கூப்பிடுதலைக் கேட்டருளினார்.” – சங்கீதம் 40 : 1

‘ஸ்டான்லி ஜோன்ஸ்’ என்பவர் ஜெபத்துக்கு ஒரு விளக்கம் கொடுத்தார். ‘பரமனுடன் பேசுதல்’ (Talking with God); ‘கடவுளுடன் நடத்தல்’ (walking with God); ‘கர்த்தரிடம் காத்திருத்தல்’ (waiting upon God) என்று விளக்கம் தந்தார்.

ஜெபம் என்பது ஒருவழிப் பாதையல்ல. நாம் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்; இறைவன் செவிமடுத்துக் கொண்டேயிருத்தல் வேண்டும் அல்லது கேட்டதைக் கொடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இது தவறான எண்ணமாகும்.

ஜெபம் என்பது இருவழிப் பாதை. நாமும் பேசுவோம். கடவுளும் பேசுவார். நாம் காத்திருந்து அவர் கூற்றைக் கேட்கவேண்டும். காத்திருத்தலும் ஜெபிப்பதில் முக்கியம். இன்றைய இறை வார்த்தை இயம்புவது இது தான்.

குடும்ப அட்டைக்கு உணவுப் பொருட்கள் வாங்க வரிசையில் காத்திருக்கின்றேன். பயணச்சீட்டுப் பெற காத்திருக்கின்றேன். ஆனால் ஜெப வாழ்க்கையில் மட்டும் காத்திருக்க எனக்கு மனமில்லை; பொறுமையில்லை; இது சரியல்ல. கர்த்தர் அவசரக்காரர் அல்ல; எதையும் அவசரப்பட்டுச் செய்பவருமல்ல. தமது இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றப் பல நூற்றாண்டுகளாகக் காத்திருந்தார். இத்திட்டத்தின் பங்காளிகளான, பயனாளிகளான நமக்கு ஏன் பொறுமையில்லை? ‘கேளுங்கள்; கொடுக்கப்படும்!’ என்பது கர்த்தரின் வாக்கு. ஆனால் எப்பொழுது கிடைக்கும்? எப்படிக் கிடைக்கும்? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. கேட்க வேண்டியது மட்டுமே நமது பங்கு! பதில் தர வேண்டியது பரமனின் பொறுப்பு! ஏற்றதை ஏற்ற வேளையில் தருவது அவரது திருச்சித்தம்.

கடவுளிடம் கேட்டு விட்டீர்களா? கடவுள் பதில் தருவார்; காத்திருங்கள்! ‘கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பலம் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளையடித்து எழும்புவார்கள்.’ ஜெபத்தில் காத்திருப்பதால் புதுபலம் கிடைக்கும்! நீங்கள் கேட்டது கிடைக்காமல் போகலாம். ஆனால் ஜெபித்துக் காத்திருப்பதில் நமது விசுவாசம் புது பலம் பெறுகிறது.

கடவுளே! உமது ஆசிக்குக் காத்திருந்து பெற்றுக் கொள்ளும் சிந்தையை எனக்குத் தந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.