லூக்கா 1 : 46-55                                              1 டிசெம்பர், 2017 வெள்ளி

“என் ஆவி என் இரட்சகராகிய கடவுளில் களி கூர்ந்திருக்கிறது.” – லூக்கா 1 : 47

மகிழ்ச்சியின் செய்தி உங்களைத் தேடி வருகிறது! திருமணமாகாத நிலையில், கர்ப்பவதியான மரியாள், தன் உறவினள் எலிசபெத்தை நாடிச் சென்றார். “என் ஆண்டவருடைய தாயார்” என்று மரியாளை வாழ்த்தினார் எலிசபெத்து. வயதான எலிசபெத்தின் வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரு பெண்களின் மனநிலையை, உள்ளத்தின் உணர்வுகளை எண்ணிப் பார்க்கிறேன். கர்ப்பந்தரித்துள்ள வயதான பெண், திருமணமாகாமல் கர்ப்பந்தரித்திருக்கும் பெண். இருவர் மனதிலும் மனக்குழப்பம், சஞ்சலம்,வெட்கம், பிறர் அவமதிப்பார்களோ என்ற அச்சம்…ஆனால் இருவரும் அளவிட முடியாத ஆனந்தக்களிப்பில் ஒருவரையொருவர் வாழ்த்துகிறார்கள். “என் ஆண்டவரின் தாயார்”, ‘ஸ்திரீகளுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள்’….‘உன் கர்ப்பத்தின் கனி ஆசீர்வதிக்கப் பட்டது’…என்று ஆவியினால் நிறைந்தவர் மாத்திரமே சொல்லக் கூடிய வாழ்த்துரைகளை மரியாளிடம் எலிசபெத்து கூறினார்.

எலிசபெத்து கூறிய வாழ்த்துரையைக் கேட்ட மரியாள், தியான வசனத்தைக் கூறி ஒரு அருமையான அழகான பாடலைப் பாடுகிறார். மரியாளின் கீதம் அது. அதை முழுமையாகப் படித்தேன். ஒரு அற்புத உண்மையைக் காண்கிறேன். உலக மீட்பராம் தேவ குமாரனைப் பெற்றெடுக்கும் பெரும் பாக்கியம், ஒப்புவமையற்ற ஆசீர்வாதம் கிடைத்ததே என்பதற்காக மாத்திரம் மரியாள் களிகூரவில்லை. இரட்சகர் இயேசுவின் தாய், ‘இது முதல் எல்லாச் சந்ததியினரும் என்னைப் பாக்கியவதி’ என்பர்கள் என்பதினால் மாத்திரம் மரியாளின் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்தவில்லை.

தாழ்வானவர்கள் உயர்த்தப்படுகிறார்கள். பசியுள்ளவர்கள் நன்மைகளினால் நிரப்பப்படுகிறார்கள். வல்லமையுடையவர் பெரிதானவைகளைச் செய்துவிட்டார். பரிசுத்த நாமமுடையவர் தலைமுறை தலைமுறையாக இரக்கம் காண்பிக்கிறார். புது உலகம், புது வாழ்வு மலர்ந்து விட்டது. எல்லாம் மரியாளின் கருவிலிருக்கிற தேவமைந்தன் இயேசுவினால் நிகழப்போகிறது. ஆகவே மரியாள் துதி கீதம் பாடினார்.

இயேசு எனக்கு, இந்த உலகின் மக்களுக்கு, மீட்பை அருள வருகிறார், வந்தார், வருவார். என் உள்ளமும் துதியுடன் கூடிய கீதம் பாடுகிறது. இவ்வுலகத்துக்கு இயேசுவின் மூலம் கிடைத்துக் கொண்டிருக்கும் இறைஅன்பு, இரக்கம், தயவு, பாவமன்னிப்பு, சமாதானம், சந்தோஷம் என்னைத் துதி கீதம் பாட வைக்கிறது. பாடுவேன். இயேசுவைத் துதித்துப் பாடுவேன். நீங்களும் என்னோடு சேர்ந்து பாடுங்கள். களிகூருங்கள்.

இறைவா! எனது ஆவியும் எனது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவில் மகிழ்ந்து, நிறைவுடன் புதிய வாழ்வைக் கண்டுகொள்ளக் கிருபை தருவீராக.  இயேசுவின் வழியே ஆமேன்.