எபிரேயர் 12 : 1-3                                                        15 அக்டோபர் 2025, புதன்

“நீங்கள் நன்றாய் ஓடினீர்களே, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாதபடி உங்களைத் தடுத்தது யார்? – கலாத்தியர் 5 : 7

கீழ்ப்படிதல் மிக முக்கியமான பண்பு. வீட்டில் குழந்தைகளுக்கு கீழ்ப்படிதலைக் கற்றுத் தருகிறோம். அதேபோல் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு கீழ்ப்படிதல் கற்பிக்கப்படுகிறது. ஏனெனில் கீழ்ப்படிதல்தான் நம்மை உயர்த்தும். பெற்றோருக்கு கீழ்ப்படிகிற பிள்ளைகள் வாழ்வில் உயருவர். பள்ளிக்கூடத்தில் கீழ்ப்படிகிற பிள்ளைகள் கல்வியில் உயருவர். அதேபோல் கடவுளுக்கு கீழ்ப்படிதல் அவசியமானது. கடவுளுக்கு கீழ்ப்படிகிற பிள்ளை ஞானத்தைப்பெறும், ஆசீர்வாதங்கள் பெறும், நித்திய ஜீவனைப் பெறும். ஆனால் கடவுளுக்கு கடைசிவரை கீழ்ப்படிந்து வாழ்வது சுலபமல்ல. அது ஒரு சவால். அதைத்தான் இந்த நாளுக்குரிய தியானப் பகுதி நமக்கு தெரிவிக்கிறது.

திருமறையில் சிம்சோன் என்ற இளைஞரை பற்றி வரலாறு உள்ளது. இவர் தாயின் கருவில் உருவாகும் முன்னே கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டவர். இஸ்ரவேலின் மீட்புக்காக கடவுள் அந்த இளைஞனை பயன்படுத்த விரும்பினார். அதற்கான ஆற்றலை கடவுள் அந்த இளைஞனுக்கு வழங்கினார். மாபெரும் சரீர பெலம் கொண்டவராக இருந்தார். இஸ்ரவேலரை கொள்ளையடித்து வந்த பெலிஸ்தியர்களுக்கு சிம்ம சொப்பனாமாக விளங்கினார். கழுதையின் தாடை எலும்பை கொண்டு ஆயிரம் பேரைக் கொன்றார். அப்படிப்பட்ட பேராற்றலை கர்த்தருடைய ஆவியானவர் அவருக்கு கொடுத்தார். யாரும் நெருங்க முடியாத வீரனாய் இருந்தார் சிம்சோன்.

ஆனால் இந்த விசுவாச வாழ்விலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வழி விலகினார். இச்சை நிறைந்த மனிதனாகி ஒழுக்கமற்றவராக மாறினார். கடைசியில் ஒரு பெண்ணினால் தன் வலிமை இழந்து எதிரிகளால் கைது செய்யப்பட்டார். கண்கள் பிடுங்கப்பட்டார். மாவரைக்க வைத்தனர். அவரது விசுவாச வாழ்வு தோல்வியில் முடிந்தது. விசுவாசத்தில் நன்றாய் ஓடினவர் இச்சையில் வீழ்ந்து போனார்.

கலாத்திய திருச்சபை விசுவாசிகள் சிலரும் வழி விலகினர். அதைத்தான் பவுல் இங்கே கண்டிக்கிறார். கர்த்தருடைய பிள்ளைகளாகிய நம்முடைய விசுவாச பயணத்தைக் கெடுக்க இங்கே பிசாசின் தந்திரங்கள் உண்டு. நாம்தான் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். உலகம் பாவம் பிசாசு போன்றவை நம்மை விழுங்க விரட்டிக் கொண்டே இருக்கும். அநேக கிறிஸ்தவர்கள் இதற்குள் சிக்கிக்கொள்கின்றனர். சிக்கிக் கொண்டால் நம் பயணம் தோல்வியில் முடியும். கீழ்படிந்தால் ஞானத்தையும், ஆசீர்வாதங்களையும், நித்திய ஜீவனையும் பெறுவோம். நமது பிள்ளைகளுக்கு இதை கற்றுத்தர வேண்டும். குறிப்பாக வாலிப பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும். நாம் கர்த்தருக்கேற்ற பிள்ளைகளாய் வாழ அழைக்கப்பட்டவர்கள்.

அன்பின் தந்தையே, விசுவாச பயணத்தில் தடையின்றி ஓட கிருபை தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.