சங்கீதம் 46 : 7-11 01 நவம்பர் 2025, சனி
“நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன்.” – யோவான் 14 : 18
கணவனை இழந்த மனைவி, அவரின் உடலுக்கு அருகில் இருந்து கொண்டு புலம்பி அழுவதை பார்த்திருக்கிறோம். எங்களை விட்டு போய் விட்டீர்களே! என்னையும் பிள்ளைகளையும் அனாதையாக்கி விட்டு சென்றுவிட்டீர்களே என்ற வார்த்தைகளை கேட்டு கலங்கி நிற்கிறோம்.
தியானப்பகுதியில் சீஷர்களிடம் இயேசு மரணத்தை வெளிப்படையாக சொல்லியபோது கலங்கி நிற்கிறார்கள். அப்பொழுது இயேசு கூறிய நல்வார்த்தை, “நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்,” என்பதாகும்.
அன்னை தெரசா அவர்களைப்பற்றி கூறும்போது, அன்னையே நீ திருமணமாகி குழந்தை பெற்று இருந்தால் அக்குழந்தைகளுக்கு மட்டும் தாயாகி இருப்பாய். ஆனால் அவற்றை துறந்ததால் அநேக அனாதை பிள்ளைகளுக்கு தாயாகிவிட்டாய் என போற்றப்படுகிறார்.
இவ்வுலக வாழ்வில் யார் நம்மை கைவிட்டாலும் கடவுள் நம்முடன் இருக்கிறார். தாய் மறந்தாலும், தந்தை மறந்தாலும் அவர் நம்மை மறப்பதில்லை. கடவுள் நம்மை அவர் உள்ளங்கையில் வரைந்து இருக்கிறார் என்ற வாக்குத்தத்தம் அவர் நம்மை திக்கற்றவர்களாக விடுவது இல்லை என்பதை உணர்த்தும்.
நாம் வாழும் சமூகத்தில் திக்கற்றவர்களை ஆதரிக்க வேண்டும். நம்முடைய பிறந்த நாள், திருமணநாள், ஞானஸ்நானம் பெற்ற நாள் போன்ற நல்ல நாட்களில் அருகில் உள்ள அனாதை இல்லங்களுக்கும், கைவிடப்பட்ட முதியோர் இல்லங்களுக்கும் சென்று அவர்களுடன் சேர்ந்து உணவருந்தி, வார்த்தைகளால் அவர்களை தேற்றி வருவது எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவம் என்பதனை உணர்ந்து அதனை செய்வோம்.
தனிமைப்பட்டு நாம் நிற்கும்போதும், கலங்கும்போதும் கடவுள் நம்முடன் இருக்கிறார். நாம் திக்கற்றவர்கள் அல்ல என்ற விசுவாசத்துடன் வாழும் நிச்சயத்தைப் பெற்றுக் கொள்வோம்.
அன்புள்ள கடவுளே! இவ்வுலக வாழ்வில் நாங்கள் திக்கற்றவர்கள், அனாதைகள் என்று உணரும்போது உமது ஆவியானவர் மூலம் நீர் எங்களுடன் இருக்கிறீர் என்ற நம்பிக்கையை தந்து வாழச் செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
