லூக்கா 2 : 40-52                               22 ஜூலை 2025, செவ்வாய்

“கடவுளுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது.” – லூக்கா 2 : 40

மனுக்குலம் பாவஞ்செய்து கடவுளோடுள்ள உறவை இழந்தது. இந்த உறவை மீண்டும் நிலைநாட்ட மனுக்குலம் மிருகங்களையும் பறவைகளையும் பலியிட்டது.

பவுலடிகளார் எபிரேயருக்கு ‘இரத்தஞ் சிந்தாதபடி மன்னிப்பில்லை’ என்று எழுதுகிறார். அவர் பறவைகள், மிருகங்கள் இவற்றின் இரத்தம் நிரந்தரத் தீர்வைத் தராது என்றும் எழுதுகிறார்.

பாவம் மனிதனால் வந்தது. அதுபோல பாவமன்னிப்பும் மனிதனால்தான் வரவேண்டும். இதற்காக கடவுள் மேசியாவான இயேசுவை மெய்யான மனிதனாக இவ்வுலகிற்கு அனுப்பினார்.

அறிவர் மார்டின் லூத்தர் கத்தெகிஸ்மு புத்தகத்தில் இயேசு கிறிஸ்து யார் என்று கேள்வி கேட்டுவிட்டு, இயேசுகிறிஸ்து பிதாவினிடம் அநாதியாய் பிறந்த மெய்யான கடவுளும், கன்னிமரியாளிடம் பிறந்த மெய்யான மனிதனுமாய் இருக்கிறார் என்று சொல்லுகிறார்.

இயேசுவின் குழந்தைப் பருவ வளர்ச்சியும், அறிவு வளர்ச்சியும் இயேசுவுக்கு தேவையாயிருந்தன. உலகில் உள்ள மற்ற குழந்தைகளைப் போல இயேசுவும் சரீரத்திலும் அறிவிலும் வளர்ந்தவர். ஏனெனில் உன்னதமானவருடைய குமாரனான இயேசு மனிதனாக தோற்றம் அளிக்கவில்லை. மெய்யான மனிதனாகவே ஆனார். கடவுளின் கிருபையைப் பெற்றவராக வளர்ந்தார்.

இயேசு வளர்ந்து பலங்கொண்டு ஞானத்தினால் நிறைந்திருந்தார். கடவுளுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. கடவுளின் கட்டளைப்படியும் வழக்கப்படியும் இஸ்ரவேலர் பண்டிகை கொண்டாட எருசலேமுக்கு செல்வார்கள். யோசேப்பும் கன்னிமரியாளும் இயேசுவும் பன்னிரெண்டாம் வயதில் பண்டிகை கொண்டாட எருசலேமுக்கு வந்தார்கள்.

பண்டிகை முடிந்து இயேசு தாய் தந்தையருடன் செல்லாமல் தேவாலயத்தில் தங்கி, ரபிமாருடன் உரையாடிக் கொண்டிருந்தார். இயேசுவைத் தேடிவந்த பெற்றோரிடம் நான் என் பிதாவின் வீட்டில் இருக்க வேண்டும் என்பது தெரியாதா? என்று கேட்டார்.

கடவுளின் கிருபை இயேசுமீது இருந்தது. அவர் ஞானத்திலும் வளர்த்தியிலும் அதிகரித்து கடவுளுக்கும் மனிதர்களுக்கும் பிரியமாக மென்மேலும் வளர்ந்தார். கிருபையை நிறைவாய் பெற்றார். குழந்தை இயேசுவின் மாதிரியை பின்பற்றுவோம். கடவுளின் கிருபைகளை பெற்றுக்கொள்ளுவோம்.

வாக்குமாறாத கடவுளே! உம் நேசகுமாரனை மனிதனாக அனுப்பினீர். அவர் மீது அமர்திருந்த கிருபையை அறிகிற நாங்கள் உம் கிருபையை நாடி தேடி வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.