யோவான் 9 : 16 21 மே, 2018 திங்கள்
“உலக சினேகம் கடவுளுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா?” – யாக்கோபு 4 : 4
`வானத்தை மட்டும் பார்க்காதீர்கள், பூமியையும் பாருங்கள்’ என்று நேற்று படித்த தியானம் நினைவிற்கு வருகிறதா? கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவுக்கு உரியவர்கள், உலகத்துக்கு உரியவர்கள் அல்ல என்பது, யாக்கோபின் கருத்து. `பிதா என்னை அனுப்பினார்… நான் உங்களை அனுப்புகிறேன், நீங்களோ உலகத்துக்குரியவர்கள் அல்ல.’ இவை இயேசுவின் சொற்கள்.
எல்லா உயிர்களும் பிராண வாயுவால் பிழைக்கின்றன. எந்த உயிரினமும் பிராணவாயு இல்லாவிட்டால் இறந்துவிடும். ஆனால் மரஞ்செடி கொடிகள் தரையில் இருந்தாலும் கரியமல வாயுவை சுவாசித்து, பிராணவாயுவை உற்பத்தி செய்கிறது, உலகுக்கு அளிக்கிறது. மரம் தரையில் நின்றாலும் உலகத்தை வாழவைக்கிறது. இது உலகச் செழிப்பின் விளக்கம். இயேசு உலகில் வாழ்ந்தாலும் உலகத்தை வாழவைத்தார். இதுதான் உலக மீட்பின் விளக்கம். அளவுக்கு மீறி சொத்து சேர்க்கும்போது, பெருவயிற்றுச் சோம்பேறிகள் ஆகும்போது, புகழை நாடி ஓடும்போது நாம் கிறிஸ்தவன் என அழைக்கப்படலாம். ஆனால் தாலி கட்டின புருஷனுக்கு (கிறிஸ்தவன்) துரோகம் செய்து, ஒன்றுக்கு மேற்பட்ட புருஷர்களைக் கொண்ட விபச்சாரிகள் நாம். கடினமான சிந்தனை, ஆனால் யாக்கோபு தான் இப்படிக் கூறுகிறார்.
`கடவுளின் பிள்ளையென்று சொல்லிக்கொண்டு பிறரைக் குறித்த கவலையை இல்லாமல் வாழுவது, இயேசுவின் அன்புக் குரலுக்கு கீழ்படியாமை. `இயேசு என்னை அனுப்பியிருக்கிறார்’ என்று சொல்லி இயேசுவின் பெயரில் சொத்து சேர்த்து உலகச் சினேகிதன் ஆவது யாக்கோபின் கூற்றுப்படி விபசாரம்.
அப்படியானால் நாம் எப்படி வாழ்வது? நாம் உலகத்திற்குள் அனுப்பப்பட்ட கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்துவிற்குரியவர்களாகவே வாழ அழைக்கப்பட்டவர்கள். இதை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
என் உரிமையாளராகிய இயேசுவே, உலகத்தை என் உடமை ஆக்குவதே என் லட்சியம் என நினைக்காதிருக்க அருள்தாரும். உலகத்தை வாழவைக்க நானும் பணி செய்ய பலம் தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.
