ரோமர் 11 : 33-35 05 அக்டோபர் 2025, ஞாயிறு
“வானங்கள் கடவுளின் மகிமையைப் பிரஸ்தாபிக்கின்றன; ஆகாய மண்டலம் அவர் கரங்களின் கிரியையை விவரிக்கிறது.”
– சங்கீதம் 19 : 1
இந்த நாளுக்குரிய தியான வசனத்தில் வானங்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. வானம் என்றுதானே குறிப்பிட வேண்டும்! வானங்கள் என்பது பன்மைதானே… இது எப்படி சாத்தியமாகும் என்ற குழப்பம் எனக்குள் தோன்றியது. இதை தெரிந்துகொள்ள ஆவலானேன். அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸா (NASA), இந்த வானம் முடிவல்ல என்கிறது. இதேபோல் இன்னொரு பால்வெளி மண்டலம் இருக்கலாம் என்று கூறுகிறது. அப்படியானால் திருமறை எவ்வளவு துல்லியமான அறிவியல் உண்மைகளைத் தன்னுள் கொண்டுள்ளது. உயிர்கள் வாழும் ஆற்றல் பெற்ற நமது பூமியும் அதனோடு இணைந்த கோள்களும் அழகானவை. சூரியனை மையமாகக் கொண்டு இயங்கும் விந்தை ஆச்சரியமானது. இந்த அதிசயத்தின் இரகசியம் என்ன என்பதைத்தான் இந்த நாளுக்குரிய தியானப் பகுதி பேசுகிறது.
அதென்னவெனில் இந்த அதிசயங்கள் கடவுளின் மகிமையை நமக்கு வெளிப்படுத்துகிறது. சங்கீதக்காரர் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் படைத்தவரின் பேராற்றலை பிரதிபலிக்கிறது என்று நமக்கு விளக்குகிறார். படைக்கப்பட்ட நாமும் படைத்தவரின் மகிமைக்கு சான்றுதான். எல்லாவற்றையும் படைத்த கடவுள் அனைத்தையும் நல்லது என்று கண்டார். நம்மையும் அவரே படைத்திருக்கிறார். மண்ணில் பிறந்திருக்கிற ஒவ்வொருவரும் படைத்தவரின் மகிமையை தரித்திருக்கிறோம். உங்கள் உருவம் அவரால் வடிவமைக்கப்பட்டது. நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உருவ கேலி செய்யப்பட்ட சகேயுவை நேசித்தார். இவனும் ஆபிரகாமின் குமாரனே என்று அங்கீகரித்தார்.
ஆனால் நம்மில் சிலரோ தன்னைப்பற்றியும் தன் தோற்றத்தைப்பற்றியும் கவலை கொள்ளுகிறோம். நான் இன்னும் அழகாக இல்லை என்றெல்லாம் கவலை கொள்ளுகிறவர்கள் உண்டு. இப்படிப்பட்ட கவலைகள் உங்களுக்குள் இருக்குமானால் இன்றைக்கே அதை தூக்கி எறியுங்கள். உங்கள் குடும்பத்தில் ஒருவரது தோற்றத்தைப்பற்றிய கவலை இருக்குமானால் அந்த கவலையை நிறுத்துங்கள்.
நீங்கள் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். உங்கள் தோற்றம் கடவுளின் மகிமையை வெளிப்படுத்துகிறது. அதேபோல் பிறரது தோற்றத்தையும் கேலி செய்யாதீர்கள். அவர்களும் கடவுளின் சாயல். அவர்கள் தோற்றத்தில் கடவுளின் மகிமை வெளிப்படுகிறது. எனவே உருவ கேலிகளை அறவே தவிர்ப்போம். அனைவரது தோற்றத்திலும் கடவுளின் சாயலைக் கண்டு கர்த்தரை மகிமைப்படுத்துவோம்.
அன்பின் பிதாவே, உமது படைப்பின் மகத்துவத்தை எங்களில் வெளிப்படுத்தியதற்கு நன்றி. பிறரின் தோற்றத்திலும் உமது ஆற்றலைக் கண்டு வாழ கிருபை புரியும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
