யாத்திராகமம் 31 : 12-15                                  20 பிப்ரவரி, 2019 புதன்

“நீங்கள் என் ஓய்வுநாட்களைத் தவறாமல் ஆசரிக்கவேண்டும்….” – யாத்திராகமம் 31 : 13

கணவன் மனைவி உறவு மிகவும் அன்னியோன்யமானது. திருமணம் என்கிற பவித்திரமான தேவ ஏற்பாட்டின் மூலம் ஓர் ஆணும் பெண்ணும் கணவன்-மனைவியாக இணைக்கப்படுகின்றனர். மரணம் அவர்களைப் பிரிக்கும் வரை சுக, துக்கங்களைச் சமமாய் பங்கிட்டு வாழ உறுதி எடுத்துக் கொள்கின்றனர். திருமணத்திற்கு பின்பு, தேவகிருபையால் இவற்றை நிறைவேற்றி வாழுகின்றனர். அன்புப் பாலமான இல்லற வாழ்வில் கணவன் மனைவி உறவை ஏற்படுத்தித் தந்தது கடவுளின் அன்பின் திட்டத்தில் ஒரு பகுதி.

இப்படி ஒரே மாமிசமாகக் கடவுளால் இணைக்கப்பட்ட ஆதி மனிதர், பாவச் சேற்றில் விழுந்தனர். பாவம் அவர்ளைக் கட்டிப் போட்டது. இது மட்டுமல்ல, பெற்றோரின் சில நோய்கள் பிள்ளைகளுக்கும், சந்ததிகளுக்கும் பாரம்பரிய நோய் ஆகின்றது. இதுபோல பாவம் பாரம்பரிய நோய் ஆகிவிட்டது. அதிலிருந்து விடுபட முடியாமல் ஆதிமனிதரும், அவர் பின்னடியார்களாகிய மனித இனமும் தவிக்கிறது. நமது வேதனையும் இதுதான். கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே பாவத்தால் ஒரு* இடைவெளி ஏற்பட்டு விட்டது. இயேசு கிறிஸ்து தனது தூய ரத்தம் மூலம் இந்த இடைவெளியைத் தகர்த்தெறிந்து கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே நல்லுறவு எனும் அன்புப் பாலத்தை ஏற்படுத்தினார். இந்த கடவுளின் அன்பைத் திரும்பத்திரும்ப ருசித்து, வாழ தேவன் ஏற்படுத்திக் கொடுத்ததே ஓய்வுநாள்.

மனைவி, மக்களுடன் ஒன்றாகக் கடவுளுக்கு நன்றி செலுத்த நாம் ஓய்வுநாளில் ஒதுக்குகிற நேரம் மிகக் குறைவு. அதிலும் ஓய்வுநாளை சரியாக ஆசரிப்பதில் பல தடவை நாம் தவறியதும் உண்டு அல்லவா? பிற காரியங்களுக்கு, பொருளாதார தேடல்களுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவே வாழ்கிறோம். ஆன்ம நேசராம் இயேசுவின் பிரசன்னத்தை ஓய்வுநாளில் தேடுவதில் நாம் தவறுவது ஏன்? தியான வாக்கியத்தில் கடவுள் வலுவான, உறுதியான, திட்டமான கட்டளையாக நீ தவறாமல் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும் என்கிறார்.

ஓய்வு நாள் பணிகளிலிருந்து விடுபட்டு, சரீரம் ஓய்வெடுப்பதோடு மட்டுமின்றி, கடவுள்-மனிதன்-மனிதர் ஆகிய முக்கூட்டு நல்லுறவை பலப்படுத்துகிற நாள். ஆன்ம நோக்கிற்காக கடவுளால் தனிமைப்படுத்தப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டு மனிதரின் அனுசாரத்துக்காக நமக்கு கட்டளை இடப்பட்ட நாள் இது. இதை உரியமுறையில் கடைப்பிடித்தே ஆக வேண்டும். எக்காரணம் கொண்டும் உதாசீனப்படுத்தலாகாது. ஓய்வு நாளில் வேலை இல்லை, பாரம் இல்லை, வேதனை இல்லை. ஆசீர்வாதம், தேவப் பிரசன்னம் மட்டுமே இருக்கிறது என்ற உண்மையை மீண்டும் மீண்டும் தியானியுங்கள்.

தூய தெய்வமே! உமது திட்டமான கட்டளையை ஏற்று ஓய்வு நாளில் களிகூர உதவி செய்யும். ஓய்வு நாளை உதாசீனப்படுத்துவதால் உம்மை மட்டுமே நாங்கள் ஒதுக்கவில்லை. எங்களை நாங்களே ஒடுக்குகிறோம். பிறரை நேசிக்கவும் மறந்து விடுகிறோம் என்ற உணர்வு தாரும். இயேசுவின் வழியே ஆமேன்.