மார்க்கு 6 : 30-32                                           31 அக்டோபர், 2017 செவ்வாய்

“அங்கே ஒரு வீட்டுக்குட் சென்று; ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும் அவர் மறைவாயிருக்க முடியவில்லை.” – மார்க்கு 7 : 24

இயேசு கிராமம் கிராமமாக நற்செய்திப் பணி செய்தார். தியான வசனம் தீரு பட்டணத்தில் நடந்த நிகழ்வு. இயேசு இரவு பகலாக நடந்து பணி செய்தார். அவரது உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வுக்காக இயேசு கப்பலின் அடித்தட்டில் இளைப்பாறினார்.  இயேசு ஓய்வுக்காக ஒரு வீட்டுக்குள் சென்றதே இன்றைய ஆதார வசனம்.

இந்த நாள் திருச்சபை சீர்திருத்தப்பட்டதை நினைவு கூறும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வசனத்தை வாசிக்கும் பொழுது லுத்தரின் வாழ்வு நினைவுக்கு வருகிறது. வார்த் புருக் கோட்டையில் லுத்தர் மறைந்திருந்தார். அந்தக் காலத்திய திருச்சபைத் தலைமை லுத்தரைக் கொன்றுவிடத் திட்டமிட்டது. கர்த்தரோ லுத்தரின் நண்பர்களைக் கொண்டு அவரைக் காத்துக் கொண்டார். வார்த் புருக் கோட்டையில் ஒருவரும் அறியாதிருக்க விரும்பினார். ஆனால் லுத்தரும், அவரது செயல்களும் மறைவாயிருக்கவில்லை. இந்தக் கோட்டையில் இருந்த காலத்தில் அநேக கடிதங்கள், துண்டுப் பிரதிகள் எழுதினார். அதுமட்டுமல்ல, இதுவரைக்கும் இலத்தீன் மொழியில் இருந்த வேதாகமத்தை ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்தார். லுத்தர் மறைந்திருந்தாலும் அவர் செயல்கள் மறைந்திருக்கவில்லை. இயேசு பிறர் அறியாதிருக்க விரும்பினாலும் இயேசுவால் மறைந்திருக்க முடியவில்லை.

தீரு பட்டணத்தில் இயேசு ஓய்வுக்காக மறைந்திருந்தார். ஆனால் சிரோபேனிக்கேயா கிரேக்கப் பெண் இயேசுவைத் தேடிக் கண்டுபிடித்து தன் மகளைப் பிடித்திருந்த பேயைத் துரத்தும்படி வேண்டிக் கொண்டாள். இயேசு அந்தப் பெண்ணின் தொடர் விசுவாச ஜெபத்தைக் கேட்டு மகளிடமிருந்த பேயை நீக்கிச் சுகப்படுத்தினார்.

மார்டின் லுத்தர் திருச்சபை சீர்திருத்த செம்மலாக செயல்பட்டார். இயேசு புது மானிடத்தின் முதல் கருவாக சீர்திருத்தவாதியாகச் செயல்பட்டார். எருசலேம் ஆலயத்தில் நடைபெற்ற அநீதி, காசு பரிமாற்றம், வியாபாரம் இவற்றை எதிர்த்து ஆலயத்திலுள்ளவர்களைச் சாட்டையால் அடித்துத் துரத்தி `என் வீடு சகல ஜனங்களுக்கும் ஜெப வீடு என்று எழுதியிருக்கிறதே. அதை நீங்கள் கள்ளர் குகையாக்கினீர்கள்’ என்று  சீர்படுத்தினார்.

நாம் அன்பு, சாந்தம், இச்சையடக்கம், பொறுமை, மன்னிப்பு, தன்னடக்கம், ஈகை, தியாகம் போன்ற நற்குணங்களால் பலரது வாழ்வில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும். பாவத்தில் சீர்கெட்ட என்னை இயேசு தனது இரத்தத்தினால் சீர்ப்படுத்தி புது வாழ்வு தந்தார். பாவியான அகஸ்டின் இயேசுவால் புனித அகஸ்டினாக சீர்திருத்தப்பட்டார். நாம் சீர்பட்டவராக வாழவும் சீர்கெட்ட தனி மனிதன், குடும்பம், சமூகம், திருச்சபையை சீர்ப்படுத்த நம்மை ஒரு லுத்தராக அர்ப்பணிப்போம். நம்மைச் சீர்திருத்தும் பணியில் இறையவர் செயல்பட அனுமதிப்போம்.

சீர்கெட்ட என்னைச் சீர்ப்படுத்தின இறைவா! நான் சீர்பட்டவனாக வாழவும் சீர்கெட்ட பிறருக்காக ஜெபிக்கவும், திருத்தவும் உதவும். இயேசுவின் மூலம் பிதாவே ஆமேன்.