1 யோவான் 2 : 8-10 16 ஆகஸ்ட், 2021 திங்கள்
“அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டவர்களாவோம்.” – 1 யோவான் 1 : 7
வானவர் ஒளியில் வாசம் பண்ணுகின்றவர். அவர் பிள்ளைகளான நாம் அவர் ஒளியைப் பிரதிபலிக்க வேண்டும். எனவே இறை ஒளியில் நடப்போம். இன்றைய தியானவரிகள் தருகின்ற அழைப்பு இது. நாம் ஒளியில் வாழ்கின்றோமா? இருளில் இருக்கின்றோமா? ஒருவரை ஒருவர் அன்பு செய்வதே ஒளியில் வாழ்வதன் அடையாளமாகின்றது.
இறைவனைப்போல அன்பு மயமாக வாழ்வதையே இறைவன் விரும்புகின்றார். நம் பரம தந்தை பாவிகளையும் அன்பு செய்தார். ‘கடவுள் தம்முடைய ஒரே பேறான குமாரனில் (இயேசுவில்) விசுவாசமாயிருக் கிறவன் எவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்’ என்ற திருமறை வாக்கு கடவுளின் அன்பை எவ்வளவு அழகாக விளக்குகின்றது. எந்த வித அன்பு செய்தலுக்கும் தகுதியற்ற மக்கள் மீது தான் இறைவன் அன்பு செய்தார். இது கடவுளின் கிருபையின் விளைவு தான், விளைச்சல் தான்!
ஒரிசா மாநிலத்தில் ஊழியஞ் செய்தவர் ஸ்டேன்ஸ். இவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். இவரைப் பகைவர்கள் உயிருடன் எரித்தனர்; இவர் மகன்கள் இருவரையும் தீயிட்டுக் கொன்றனர். ஸ்டேன்ஸின் துணைவியார், கொலை செய்தவர்களை மன்னித்து விட்டதாகப் பேட்டி அளித்தார். இந்திய மண்ணுக்காக உழைப்பேன். இந்த மண்ணில் அடக்கம் பண்ணப்படவே விரும்புகிறேன் என்றார். இவர் மகளும், ‘கர்த்தர், தமக்குத் தகுதியுள்ளதாக என் தந்தையின் மரணத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு தோத்திரம்!’ என்றார்.
வாழ்க்கை என்ற கப்பலுக்கு கலங்கரை விளக்கம் நம் இரட்சகர் இயேசு கிறிஸ்து. அவர் நமக்கு முன் செல்கின்றார். அவர் பாதை கடினமாகக் காணப்படலாம். ஆனால் அழியாப் பெரு வாழ்வு தந்திடும் பாதை அது! வாழ்வை நோக்கிய ஜீவ பாதை அது! இப் பாதையில் பயணிப்போம்! இறையவரின் பாதைப் பயணம் இனிமையாகவே முடியும்.
கலங்கரை விளக்கமாகிய கடவுளே! இருளில் தத்தளித்திடும் எனது வாழ்க்கைக்கு ஒளி ஏற்றும். உமது ஒளியால் இறை நாட்டிற்கு அழைத்துச் செல்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.