யோவான் 1 : 14-16 19 அக்டோபர், 2021 செவ்வாய்
“அவருக்குள் நீங்களும் ஆவியின் மூலமாய்க் கடவுளின் வாசஸ்தலமாகக் கூட்டி கட்டப்பட்டு வருகிறீர்கள்.” – எபேசியர் 2 : 22
கிறிஸ்தவத் திருச்சபை என்பது ஒரு கூட்டுறவு ஆகும். இயேசு கிறிஸ்துவைத் தலையாகக் கொண்ட சரீரம் போன்ற பல அங்கங்கள் ஒன்றிணைந்த கூட்டுறவு. இந்தக் கூட்டுறவு நம்மிடையேயும் நிலவட்டும். கடவுள் நம்மிடையே வாசம் பண்ணும் நோக்கோடு அவரது ‘வாசஸ்தலமாக’ இந்த ஒன்றிணைப்பு அடையாளத்தைக் காட்டுகின்றார் பவுல். இப்படிப்பட்ட தனிச் சிறப்புடைய கூட்டுறவாம் திருச்சபை எத்தனை உயர்வானது! கறை, திரை ஒன்றுமில்லாத, மகிமையுள்ளதாக பரிசுத்தமாகப் பராமரிக்கப்பட வேண்டியது இந்தச் சபை என்ற கூட்டுறவு. உலகளாவிய கிறிஸ்தவக் கூட்டுறவு என்ற அர்த்தத்திலும், இரண்டு மூன்று குடும்பங்களைக்கொண்ட சிறிய ஸ்தல சபை என்ற நிலையிலும் கிறிஸ்துவில் ஒன்றிணைதல்தான் ஆதாரமாக இருக்கிறது.
தனிவிசுவாசி குறைவுள்ளவராக இருக்கலாம். ஒரு குற்றவாளியை மனதில் நிறுத்தி அவன் வாழும் ஊரையே தண்டிக்க முடியாது. இது போன்றே கிறிஸ்துவில் இணைந்த குறைவுள்ள மனிதரின் கூட்டிணைவை பரிசுத்த சபை ஆக்குவது கிறிஸ்துவின் கிருபையே. கிறிஸ்தவக் கூட்டுறவு வளர்ந்துவரும் உறவு நிலையாக எருசலேமில், இயேசுவோடிணைந்த ஓரிருவரில் தொடங்கியது. யூத குல மக்கள் யாவரையும் இணைத்து, தொடர்ந்து யூதரல்லாத ஏராளம் மக்களையும் சேர்த்துக் கொண்டு, தேச எல்லைகளைக் கடந்து உலகப் பெரும் நம்பிக்கையாக இந்த ஒன்றிணைவு வளர்ந்துகொண்டிருக்கின்றது. நாம் நிறம், தோற்றம், உணவுப்பழக்கம், பேசும் மொழி, செய்யும் தொழில், கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள், பழக்க வழக்கங்கள், விருப்பு-வெறுப்பு இவற்றால் வேறுபட்டு இருக்கிறோம். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கட்டப்பட்டிருக்கிறோம் என்பதை மறத்தல் கூடாது. வேறுபாடுகளை மறந்து தூய ஆவியானவரினால் கிறிஸ்தவக் கூட்டுறவு என்ற ஒன்றிணைவில், சபையில் நிலைத்து வாழுவோம்.
எங்கள் நடுவே வாசம் பண்ணும் நல்ல மேய்ப்பனாம் ஆண்டவரே, நாங்கள் ஒரே மந்தையாய் வாழ அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.