மாற்கு 13 : 22-23                                  27 ஆகஸ்ட், 2021 வெள்ளி

“ஐசுவரியத்தின் வஞ்சகமும்… உட்புகுந்து வசனத்தை நெருக்கிப் போடுகின்றது.” – மாற்கு 4 : 19

செல்வந்தரின் மகள் ஒருத்தியை ஓட்டப் பந்தயத்தில் யாராலும் வெல்ல முடியவில்லை. இவள் வெற்றி, திறமையினால் கிடைக்கவில்லை. பொன்னால் வஞ்சித்து ஒவ்வொரு தடவையும் வெற்றி பெற்றாள். பந்தயம் நடைபெறும் போது இவளை யாராவது முந்தி ஓடுவார்களானால் உடனே அவர் முன்னால் பொற்காசுகளை விட்டெறிவாள். பொற்காசுகளை எறிந்து கொண்டே ஓடுவாள். வீரர்கள் பொற்காசுகளைப் பொறுக்கின பின்பு ஓடுவர். இதனால் அந்தப் பெண் வெற்றி பெறுவாள். இது ஓர் தந்திரம் மற்றும் ஐசுவரிய வஞ்சகம் தானே.

இரட்சகர் இயேசு கிறிஸ்து ஓர் உவமைக் கதை சொன்னார். இதை ‘விதைக்கிறவன் உவமை’ என அழைக்கின்றோம். விதைக்கிறவன் ஒருவன் விதைகளை விதைத்தான். சில விதைகள் முட்செடிகளுக்கிடையில் விழுந்தன. விதைகள் முளைத்தன; வளர்ந்தன விரைவாக. இச்செடிகளை, முட்செடிகள் நெருக்கி விட்டன. பலனளிக்கவில்லை. அதாவது இறை வார்த்தைகள் சில இதயங்களில் விழுகின்றன. உற்சாகமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் ஐசுவரிய இச்சை இதயங்களை வஞ்சித்து விடுகின்றது. விளைச்சல் கொடுக்காதவாறு ஐசுவரிய இச்சை இடையூறாகிவிடுகின்றது. ‘பண ஆசை எல்லாத் தீமைகளுக்கும் ஒரு வேர்; சிலர் அந்த ஆசையால் விசுவாசத்தை விட்டு மோசம் போய் அநேக வேதனைகளால் தங்களையே உருவக் குத்திக் கொண்டார்கள்’ என்றார் புனிதர் பவுல்.

நான் என்னையே சுய பரிசோதனை செய்கிறேன். ஐசுவரியத்தைப் பற்றிய இச்சை, பேராசை, எனது ஆன்மீக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கின்றதா? இரட்சகருடன் எனக்குள்ள உறவால் விளைய வேண்டிய பலனை என் பேராசை கெடுக்கின்றதா? யூதாஸின் ஐசுவரிய ஆசை அவனை ஏமாற்றி விட்டது. இரட்சகர் இயேசுவுடனான உறவை வெள்ளிக் காசு அறுத்து விட்டது. சீடர்களுடன் யூதாசுக்கு இருந்த நல்லுறவும் பேராசையால் துண்டிக்கப்பட்டது. யூதாஸ் நமது வாழ்க்கைக்கு ஓர் எச்சரிக்கை! இறைத் துணையுடன் ஆசைகளை வெல்வோம்.

பரம தந்தையே! நீவிர் தயவாய்த் தந்தருளியுள்ள ஐசுவரியத்திற்கு தோத்திரம். யாரையும் ஏமாற்றாதபடியும்; சுய பெருமை கொள்ளாதபடியும் காத்தருளும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.