1 கொரிந்தியர் 10 : 25-28                                     11 ஜூலை, 2017 செவ்வாய்

“பூமியும், அதன் நிறைவும்… கர்த்தருடையவை.” – சங்கீதம் 24 : 1

எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு! எப்படி? என்னையும் பிற அனைத்தையும் படைத்தவர் பரம பிதா. தந்தையராம் இறையவர் சொத்து எனது அனுபவத்திற்கு உட்பட்டது தானே! எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு! ஆனால் எனக்கு ஒத்துக் கொள்ளாதவையும் இருக்கின்றன. உடல் நலம் பாதிக்கக் கூடியவற்றை நான் உண்ணமாட்டேன். எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமை உண்டு! நான் கிறிஸ்தவன். பக்திவிருத்திக்கு, விசுவாச உணர்வை வளர்க்கிறவற்றை நான் அனுபவிப்பேன், பயன்படுத்துவேன். அதே சமயம் கிறிஸ்துவுக்கு ஏற்காதவற்றை நான் விலக்கிவிடுதல் தானே கிறிஸ்தவப் பண்பு. கிறிஸ்துவும் அப்படிப்பட்ட ஒரு தெளிவைத்தானே நம்மிடம் எதிர்பார்க்கிறார். எல்லாம் கர்த்தருடையவை! இதை சரியாகப் புரிந்து கொள்ள எகிப்து, பார்வோன், இஸ்ரேலியர், மோசே இவர்கள் காலத்து நிகழ்வை நினைத்து அல்லது படித்துப் பார்ப்போம். மனிதர், மிருகம், பயிர் வகைகள், நதி, நீர், தவளை, கொசு, ஈ, வெட்டுக்கிளி, நோய், கல், மலை அனைத்தையும் ஆளுகின்றவர் கர்த்தர். இவற்றில் எதையும் ஆசியாக அல்லது வாதையாகப் பயன்படுத்திடும் ஆற்றலும் உரிமையும் கர்த்தருக்கு இருந்தது. `யாவற்றையும் உங்களுக்குக் கொடுத்தேன்’ என்றார் கர்த்தர். ஆனால், நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என விதிவிலக்கை மனிதகுலத்திற்கு ஓர் எல்லையாக்கினவர் கர்த்தர்.

நம்முடைய உரிமையில் எத்தனை ஆற்றல் உள்ளதோ அதைவிட `வேண்டாம்’ என்ற வேலி மிகவும் எச்சரிப்புடன் நாம் தவிர்க்க வேண்டிய கத்திமுனையாகும். சுவர் வேலி! தேசங்களை, ஊர்களைப் பிரித்து வைக்கிறது. உதாரணம் சீனப் பெரும் சுவர். முள்வேலி! முட்கம்பிகள் எல்லையை பிரித்துக் காட்டும். உயிர்வேலி! ஆடுதின்னாப் பாளை என்ற செடி எல்லை ஓரத்தில் வைத்து வளர்க்கப்படும். இவை ஆடு மாடுகளைத் தடுத்து நிறுத்தும். மின்வேலி! கரடி, யானை, காட்டு மாடுகளை வயலில் நுழைந்துவிடாமல் தவிர்க்கும் ஆபத்து நிறைந்த எல்லை. எல்லையை மதிக்காமல் நுழைவது உயிர் நஷ்டம் ஆகிவிடும். எல்லை என்பது உரிமைக்கோடு மட்டுமல்ல! அது உயிர்க் கோடு. உரிமையை உயர்த்திப் பிடிக்கிறோம். நன்று. எல்லையை மதித்து வாழ்கிறோமா? பத்து கட்டளைகள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ தொடாதே! ருசி பாராதே போன்ற எல்லைகள் நமக்கு இருக்கின்றன.

எல்லை தாண்டி பந்து சென்றாலும் விசில் ஊதப்படும். எல்லை தாண்டி விளையாட்டு வீரர் சென்றாலும் விசில் ஊதப்படும். கர்த்தருக்கு அடுக்காதவை எனக்கும் வேண்டாதவை ஆகட்டும். இறையவர் விலக்கியவற்றிற்கு நானும் விலகி வாழுவேன். விலகி வாழ்ந்திடவும் கற்றுக் கொள்வோம்.

எல்லையை உருவாக்கிய பரம தந்தையே! என் உரிமையை மீறாமல் வாழுகின்ற நல்உணர்வை எமக்குத் தாரும். இயேசு வழியே ஆமேன்.