எண்ணாகமம் 14 : 18-19                                  27 பிப்ரவரி 2026, வெள்ளி

“அவர் (கர்த்தர்) எப்பொழுதும் வழக்காடார்; என்றைக்கும் கோபம் கொண்டிரார்.” – சங்கீதம் 103 : 9

எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிக்கும் மனிதர்கள் உண்டு. இப்படிப்பட்ட மனிதர்களால் சக மனிதர்களில் இருக்கும் நன்மையை காணவோ அவர்களை பாராட்டவோ இயலாது. அவர்கள் எந்த காரியத்திலும் குறையை கண்டுபிடித்து விடுவார்கள். ஏனெனில், மனிதர்களாகிய நாம் யாரும் எந்த குறைவும் இன்றி பூரணமானவர்களாக இருந்துவிட முடியாது.

நம்மைப் படைத்து ஆளுகை செய்யும் கடவுள், நம்முடைய பலவீனங்களையும் குறைவுகளையும் நன்கு அறிகிறார். நாம் செய்யும் எந்த பாவங்களும் அவருடைய கண்களுக்கு மறைவானவைகள் அல்ல. ஆனால் மிகுந்த இரக்கமுள்ள கடவுள் எப்பொழுதும் வழக்காடுபவர் அல்ல. அவர் என்றைக்கும் கோபம் கொள்வதுமில்லை.

ஏனெனில் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக அவர் நம்மை கையாண்டால் நம்மில் ஒருவர்கூட தப்பிக்க முடியாது. எல்லாரும் தண்டனைக்கு உரியவர்களாக இருப்போம். இன்றைய வாசிப்புப் பகுதியில் வனாந்தர பயணத்தில் இஸ்ரவேல் மக்களின் பாவங்களை மன்னித்து இரக்கம் காண்பித்த கடவுளை காண்கிறோம். அவர்கள் முரட்டாட்டமுள்ள மக்களாக இருந்தும் கடவுள் அவர்களை கைவிடாமல் அவர்களை வாக்களித்த தேசத்தில் கூட்டி சேர்த்தார்.

‘எல்லாரும் வழிவிலகி ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்’ என்கிற வசனத்தின்படி நாம் அனைவரும் பாவத்தால் கறைபட்டவர்களே. கடவுள் தன் மகனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்கு கொடுத்ததினால் கடவுள் நம் மேல் வைத்த அன்பையும் அவரது இரக்கத்தையும் விளங்கப்பண்ணினார். கடவுளிடமிருந்து இரக்கத்தை பெற்றுக் கொண்ட நாமும் ஒருவருக்கொருவர் குற்றம் கண்டுபிடிக்க முயற்சியாமல் குறைகளை மன்னிக்கிறவர்களாக வாழ வேண்டும். பிறரது குறைகளை சீர் செய்ய உதவ வேண்டும். வாழ்வில் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்தி வாழ்வோம்.

கிருபாசம்பனரான கடவுளே! உமது கிருபையை பெற்று வாழவும் உமது குணாதிசயங்களை தரித்து வாழவும் உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.