சங்கீதம் 6 : 8-10                         08 டிசம்பர் 2025, திங்கள்

“உமது இரக்கத்தினிமித்தம் என்னை இரட்சியும்.” – சங்கீதம் 6 : 4

சங்கீதம் 6, ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் தாவீது, தன் உதவிக்காக கடவுளிடம் மன்றாடும் இதயப்பூர்வமான மன்றாட்டாகும். வசனம் 4இல், தாவீது தன்னை விடுவித்து, காப்பாற்றும்படி கடவுளிடம் மன்றாடுகிறார். இந்த வேண்டுகோள் விரக்தியின் நிமித்தம் வருகிறது, ஆனாலும் நம்பிக்கைக்குரியதாக நாம் காண்கிறோம். கடவுளின் அன்பு குறைவில்லாதது என்பதை தாவீது அறிவார், மேலும் அந்த அன்பின் அடித்தளத்தில்தான் அவர் மீட்புக்காக வேண்டுதல் செய்கிறார்.

கடினமான சூழ்நிலைகளில் கடவுள் நம்மை கைவிட்டதாகக் கருதுகிறோம். இத்தகைய சூழலில் தாவீதைப்போல, நாம் கடவுளிடம் நம்பிக்கையுடன் நமது வேண்டுதலை சமர்பிக்க அழைக்கப்படுகிறோம். கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பு ஒருபோதும் மாறாது, அனைத்தும் நிச்சயமற்றதாகத் தோன்றினாலும், கடவுளின் மாறாத அன்பு நம் வாழ்வில் நிலையானது. இந்த அன்பே, நமக்காகச் செயல்படவும், நம்முடைய பிரச்சனைகளிலிருந்து நம்மைக் காப்பாற்றவும், அவருடைய சமாதானத்தை நமக்கு வழங்கவும் செய்கிறது.

இந்த வசனம் நமது போராட்டங்களில் நாம் தனியாக இல்லை என்பதையும் நினைவூட்டுகிறது. நம் அழுகுரலைக் கேட்டு, நம் வேதனைகளை புரிந்துகொண்டு கடவுள் நமக்கு உதவி செய்கிறார். இதை அறிந்து நாம் கடவுளுக்கு சேவை செய்ய அழைக்கப்படுகிறோம். நாம் எத்தகைய நிலைகளை எதிர்கொண்டாலும், கடவுளின் பரிபூரண அன்பினால் நம்மை விடுவிப்பார் என்று நம்பி வாழ, கடவுள் நம்மை அழைக்கிறார்.

துன்ப நேரங்களில் கடவுளை அழைப்போம். நம் வேதனைகளையும் போராட்டங்களையும் அவர்முன் கொண்டுச் செல்வோம். கடவுள் நம்மை விடுவிப்பார். அவருடைய இந்த அன்பில் நிலைநின்று வாழுவோம்.

கடவுளே! எங்கள் இக்கட்டுகளிலிருந்து விடுவியும், உமது மாறாத அன்பினால் எங்களை வழிநடத்தும். உமது வாக்குத்தத்தங்களில் நம்பிக்கை வைத்து, துணிவோடு வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.