எரேமியா 42 : 13-15                                          12 அக்டோபர், 2021 செவ்வாய்

“கீழ்ப்படியாததும் எதிர் பேசுகிறதுமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டி….” – ரோமர் 10 : 21

மனிதர்கள் பலருக்குத் தான் மிகச் சரியானவன் (Perfect) என்ற எண்ணம் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே அவர்கள் பிறரையும் அளக்கின்றனர். ‘நான் சரியானவன்’ எனும் அளவுகோலை வைத்து ‘கடவுளுக்குக் கீழ்ப்படியாதவர்’ என மனிதர்கள் பற்றியும், தீவிரவாத நாடுகள் என பல நாடுகளைக் குறித்தும் நாம் பேசும்போதும் நமது சுயநலமும் தவறான அளவீடும் வெளிப்படுகிறது. ஆனால் கடவுள் உலக மக்கள் அனைவரையும் மிகவும் அன்புடனும் கரிசனையுடனும் காக்கின்றார். மிகவும் நெருக்கமான முறையில் கடவுள் நம்மைப் பரிபாலித்த பின்னரும், நாம் கடவுளுக்குச் செவிமடுக்காமலும், கீழ்ப்படியாமலும் இருக்கின்றோம் என்பது திருமறை நமக்குக் கூறும் செய்தி.

பழைய ஏற்பாட்டுத் தகவல்களின் படி, கடவுளின் சிறப்புச் சலுகைகளை பெற்றவர்கள் இஸ்ரவேலர். இவர்கள் கடவுளால் அன்புகூரப்பட்டவர்கள். கடவுளின் சொந்த ஜனம் எனும் பெயர் பெற்றவர்கள். இக்கருத்தால் இவர்களைப் பற்றிய அச்சம் பிறருக்கு இருந்தது. ஆனாலும் ‘கடவுளுக்குக் கீழ்படியாதவர்கள்’ என்ற குற்றச்சாட்டுக்கு அதிகம் இலக்கானவர்கள் இஸ்ரவேலரே. மோசே முதலிய தலைவர்களும், ஏசாயா, எரேமியா போன்ற இறைவாக்கினரும் புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் கூட இந்த உண்மையைக் குறிப்பிட்டனர். தான் அதிகமாய் நேசிக்கிறவர்களிடம் அதிகக் கீழ்ப்படிதலையும், பொறுப்புடன் நடந்து கொள்ளுதலையும் கடவுள் எதிர்பார்க்கிறார். கிறிஸ்துவினால் மன்னிக்கப்பட்ட நாம் இதற்கு மாறாக இருந்தால், கடவுளின் மனம் வேதனைப்படும். இயேசு கிறிஸ்துவை நம் இரட்சகராகத் தந்த கடவுள் நம்மை அதிகமாய் நேசிக்கிறார். நமது கீழ்ப்படியாமை அவரது உள்ளத்தை நோகச் செய்யும். இறைச் சித்தத்திற்கு எதிர் பேச்சு பேசாதிருப்போம். அவர் சித்தத்துக்குக் கீழ்ப்படிந்து வாழ்வோம்.

ஆண்டவரே, உமது சித்தம் எங்களுக்கு நன்மையாகவே இருக்கும் என்றறிந்து, உமக்குக் கீழ்ப்படிந்து வாழத் துணை செய்யும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.