லூக்கா 21 : 5-8                              03 பிப்ரவரி 2026, செவ்வாய்

“சர்ப்பமானது தன் தந்திரத்தினால் ஏவாளை வஞ்சித்தது போல ….. கிறிஸ்துவின் மேலுள்ள கபடற்ற பக்தியையும்… விட்டு விலகி …..” – 2 கொரிந்தியர் 11 : 3

இயேசு இந்த வருடம், இந்த நாளில், இந்த இடத்தில் வருவார் என கூறப்பட்ட வதந்திகளை நம்பி காத்திருந்து ஏமாந்த மக்கள் அனேகர். பல காலக்கட்டங்களில் இப்படிப்பட்ட ஏமாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்தன. 2000ஆம் வருடம் நெருங்கின நாட்களில் இயேசு கிறிஸ்து வரப்போகிறார் எனக் கூறி வந்தனர். அனேக மக்கள் ஏமாற்றப்பட்டனர். இன்றும் கிறிஸ்துவின் வல்லமை இங்கே இருக்கிறது, அங்கே இருக்கிறது என்று கூறி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஏமாற்றுச் செயல்களால் மக்கள் கடவுள் மீதுள்ள விசுவாசத்தை இழந்து விடுகிறார்கள்.

ஏதேன் தோட்டத்தில் பிசாசு பாம்பின் வடிவில் வந்து தோட்டத்தின் நடுவில் நிற்கிற மரத்தின் கனியை புசித்தால் உங்கள் கண்கள் திறக்கப்படும், நீங்கள் கடவுளைப்போல நன்மை தீமையை அறிவீர்கள் எனக் கூறினான். இப்படி கூறி ஏவாளை ஏமாற்றினான். இதனால் அதாம், ஏவாள் கடவுளின் தண்டனையைப் பெற்றார்கள். இதுவே முழு மனுக்குலமும் பாவத்தில் விழவும், பாவத்திற்கான தண்டனை பெறவும் காரணமாயிற்று.

இன்று நம்மையும் வஞ்சிக்க பிசாசு முயற்சி செய்வான். வாழ்வில் எளிதில் ஆசிர்வாதங்கள் பெறுவீர்கள் என பொய் போதனைகள் கூறி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். குணமாக்கும் வல்லமைகள், தீர்க்கதரிசன வார்த்தைகள் என தந்திர வார்த்தைகளால் மக்கள் இழுத்து செல்லப்படுகின்றனர். முடிவில் கடவுள்மேல் நம்பிக்கையற்று நிற்கிறார்கள். நமதாண்டவர் இயேசு கிறிஸ்து இவ்வுலகின் கடைசி நாட்களை குறித்து கூறினபோது ‘அந்த நாட்களில் நீங்கள் வஞ்சிக்கப்படாதபடி எச்சரிக்கையாக இருங்கள்’ என்று கூறினார். மேலும் நானே அவர் என்று என் நாமத்தைக் கொண்டு அநேகர் வருவார்கள், அவர்களுக்கு பின் செல்லாதீர்கள் என்று எச்சரித்தார்.

ஆகவே பிசாசு நம்மை ஏமாற்றிவிடாதபடி எச்சரிக்கையாக இருப்போம். இறைபக்தியை விட்டு நம்மை விலகச் செய்கிற பிசாசின் தந்திரங்களை வெற்றிகொள்ள நாம் ஆயத்தமாக இருப்போம். இறை உறவில் எப்போதும் நாம் நிலைத்திருப்போம்.

அன்பின் கடவுளே! பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்கவும், அவற்றை வெற்றி கொள்ளவும் எங்களுக்கு உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.