மத்தேயு 6 : 16-18 17 பிப்ரவரி 2021, புதன்
“உபவாசிக்கும் போது….. மனுஷருக்கல்ல… உன் பிதாவுக்கே காணப்படும்படி…..” – மத்தேயு 6 : 17
இன்றைக்கு சாம்பல் புதன் கிழமை. பாடுகளின் காலம் இன்றிலிருந்து துவங்குகிறது. இக்கால கட்டத்தில் பலரும் உபவாசம் இருப்பர். உபவாசம் என்பது ஒரு நாளோ, பல நாட்களோ உண்ணாமல் நீர் அருந்தாமல் இருப்பதாகும். உடலுறவைத் தவிர்ப்பதும் கூட உபவாசமாகும். உபவாசம் ஆன்மீக வாழ்வுக்கு மிக அவசியம் என்பதை நாம் அறிவதில்லை. இதனால் உபவாசத்தை சடங்காக, சம்பிரதாயமாக மக்கள் கைக்கொள்ளுகிறார்கள். உபவாசம் உடல் மனத் தூய்மைக்கும், வேண்டுதல் கேட்கப்படுவதற்கும், துக்கத்தை முன்னிட்டும் மதச்சடங்குகளில் தனி இடம் பெறுகிறது.
நமது தியானப் பகுதி உபவாசம் என்பதின் உண்மையான கருத்தையும், அதைக் கையாளும் முறையையும் ஒழுங்கையும் விவரித்துக் காட்டுகிறது. கடவுளோடுள்ள உறவில் நிலைநிற்க இறைவார்த்தை, தொழுகை, ஜெபம், தானதர்மம், நற்செயல்கள் போன்றவை அவசியமானவை. அத்துடன் மனிதனின் தாழ்மையும் கடவுளில் வைக்கிற நம்பிக்கையையும் அன்பையும் உபவாசம் எடுத்துக் காண்பிக்கிறது. இதன் வழியே உபவாசத்தின் உட்கருத்தினையும் அதனை கையாளும் முறையையும் திருமறை ஒழுங்குப்படுத்துகிறது. மக்களின் ஆழ்ந்த உணர்ச்சிகளையும் துக்கத்தையும் வெளிப்படுத்த உபவாசம் உதவுகிறது. துக்கம், சோகம், பேரிடர் போன்ற காலங்களில் உருக்கமான மன்றாட்டு ஆகியவற்றிற்கு உபவாசம் அவசியமாகிறது. உபவாசம் தவ நெறியல்ல. கடவுளை இதனால் பிரியப்படுத்த முடியாது. உபவாசத்தால் கடவுளின் அருட்கொடைகளைப் பெறலாம் என்று நினைத்தால், நாம் கடவுளின் கிருபையின் செயல்பாடுகளை கிரியைகளால் பெறத் துடிக்கிறோம் என்பதே பொருள். நாம் கடவுளையே நம்பி இருக்கிறோம். கடவுளுக்கே நம்மை ஒப்புக் கொடுக்கிறோம் என்ற மன நிலையில் இருக்க உபவாசம் உதவவேண்டும். மாறாக இது இன்று வெளிப்படையான ஆசாரமாக மாறியிருக்கிறது. பிறர் காணவேண்டும் என்ற எண்ணத்தில் பிரபலப்படுத்தப்படுகிறது. நம் ஆண்டவர் உபவாசத்தைக் குறித்துச் சொல்லும்போது மாயக்காரராய், முகவாடலாய் இருக்க வேண்டாம். நாம் உபவாசிக்கிறது மனிதருக்கல்ல கடவுள் பார்க்கும்படி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் பிதாவாகிய கடவுள் பலன் அளிப்பார் என்கிறார் நமதாண்டவர்.
யோவேல் தீர்க்கர் வழியாக கடவுள் சொல்லும் போது உங்கள் ஆடைகளையல்ல இருதயத்தையே கிழியுங்கள். ஒளிவு மறைவு இல்லாமல் கடவுளுக்கு எல்லாவற்றையும் தெரிவியுங்கள் என்கிறார். நம் பாவங்களை அறிக்கையிட்டு நம்மை கடவுளுக்கு அற்பணிக்க அழைக்கிறார். இன்று முதல் நம் ஆண்டவர் இயேசுவின் பாடு மரண நிகழ்வுகளை தியானிக்க இருக்கிறோம். இந்த ஆண்டும் தவக் காலங்களை கடவுள் கிருபையாய் தந்திருக்கிறார். சிலுவையிடம் வருவோம். கல்வாரிப் பாடுகளை அதிகமாய் தியானிப்போம். கடவுளோடுள்ள உறவில் பலப்படுவோம். நம்மை கடவுள் கரத்தில் அற்பணிப்போம். எதிர் வருகிற நாட்களில் கடவுளோடுள்ள உறவில் நெருக்கமாய் வாழ்வோம்.
விண்ணகத் தந்தையே, எங்கள் வாழ்வில் ஓர் தவக்காலத்தை தந்ததற்கு நன்றி. சிலுவைப் பாடுகளைச் சிந்தித்து இயேசுவில் பாவமன்னிப்பைப் பெற்று வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.