மத்தேயு 6 : 5-8                                                  18 நவம்பர் 2021, வியாழன்

“அதிகாலையில்…. எழுந்து…. போய் அங்கே ஜெபித்துக் கொண்டிருந்தார்.” – மாற்கு 1 : 35

செல்வராஜ் என்பவர் ஒரு ஆலயத்தில் கோயில் குட்டி. நன்றாகப் படித்தவர்தான். ஆனால் வேலை கிடைக்கவில்லை. ஆகவே உள்ளூர் ஆலயத்திலேயே மனநிறைவுடன் இதைச் செய்தார். அவருடைய தாயார், இவர் ஆறு வயதாக இருந்தபோதே இறந்து போனார். அப்பா இரண்டாவது கலியாணம் செய்து கொண்டார். சித்தி கொடுமையை செல்வராஜ் செழிப்பாக அனுபவித்தார். சித்தி கொடுமை அதிகமாகி விட்டால், இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டுக்கு வரமாட்டார். இரண்டு நாளா எங்கே போனே ஊர் சுத்துறியா? என்று கேட்டால் ‘மனசு சரியில்லை சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனேன்’ என்பார். ஒரு நாள் செல்வராஜ் எந்த வீட்டிற்குப் போகிறார் என்று இரகசியமாக ஆராய்ந்தாள் சித்தி. செல்வராஜ் எங்கேயும் போகவில்லை. கோவிலிலேயே படுத்திருந்தார். வேதம் வாசித்தார். ஜெபம் செய்தார். பாட்டுப் பாடினார். படுத்துக் கொண்டார். அதிகாலை நண்பகல், மாலை, இரவு, இதுதான் நடந்தது.

தனித்திரு! விழித்திரு! ஜெபித்திரு! இயேசு இதை நடைமுறைப்படுத்தினார். ஊர் முழுவதும் இயேசுவிடம் கூடி விட்டது. பணி செய்து களைத்துப் போனார். உழைக்கிற பாட்டரி, ரீசார்ஜ் செய்யப்பட வேண்டுமே. ஆகவே அதிகாலையில் எழுந்தார். இருட்டோடே நடந்தார். ஆள் அரவமற்ற வனாந்திரம் போய்ச் சேர்ந்தார், ஜெபித்தார். அவருடைய களைப்பு நீங்கியது. புதிய ஆற்றல் பெற்றார். அடுத்த ஊர்களுக்குப் போவோம்! அங்கும் பணி செய்ய வேண்டும்! இதற்காகத்தான் வந்தேன்… என்று புதிய தெம்புடன் பேசினார். ஜெப நேரம் தவ வலிமை பெறுகிற நேரம். விசுவாசம் பலப்படுகிறது. ஆன்மம் சுத்தமடைகிறது. நற்செயல் செய்திட ஆர்வம் பிறக்கிறது. அருட்பணி செய்திட ஆற்றல் அருளப்படுகிறது.

பொது ஜெபம், குடும்ப ஜெபத்திற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை ‘தனி ஜெபத்திற்கு’நாம் கொடுப்பதில்லை. தனியே ஜெபித்துப் பாருங்கள். அந்தரங்கத்தில் இருக்கிற பிதாவோடு தனித்திருக்கப் பழகிடு. இந்தத் தனிமை நேரத்தை யோசித்துப் பார். அங்கே பேசுவது கூட அவசியமில்லை. நீ பரம தந்தையைப் பார்! பரம தந்தை உன்னைப் பார்ப்பது உறுதி. உனக்கு என்ன வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இந்த ஜெபத்தின் விளைவு மிக மிகப் பெரிய பலன் கிடைக்கும். உன் ஜெப வாழ்வுக்கு ஆதாரம் இயேசுவின் ஜெப வாழ்வாக அமைவதாக. உன் ஜெப வாழ்வுக்கு ஆதாரம் இயேசுவின் ஜெப வாழ்வு என்பது நினைவிலிருப்பதாக.

அன்புள்ள கடவுளே! எமது தேவைகளை அறிந்தவரே நாங்கள் கேட்பதற்கு முன்பே கொடுக்க முன் வருபவரே பிரார்த்தனை வாழ்வு, பரமபிதாவாகிய உமக்கும் உமது பிள்ளையாகிய எமக்கும் உள்ள பாசப் பிரதிபலிப்பாகட்டும். இயேசு வழியே ஆமேன்.