1 யோவான் 5 : 3-5                        27 செப்டெம்பர், 2021 திங்கள்

“அவரோடிருக்கிறவர்களும் ஜெயிப்பார்கள். இவர்கள் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள்.” – தரிசனம் 17 : 14

நெப்போலியன், ஒரு நகரத்தைப் பிடிக்கத் தன் படைவீரர்களோடு சென்றான். ஒரு ஆற்றின் பாலத்தைக் கடந்து யுத்தம் செய்தார்கள். போரின் கடுமையினால் வீரர்கள் பின்னோக்கி வந்தனர். இதைக் கண்ட நெப்போலியன் அப்பாலத்தை வெடி வைத்துத் தகர்த்தார். வீரர்கள் திரும்பி ஓட வழியில்லை! போர் வீரர்கள் நகரத்தைப் பிடித்தே ஆக வேண்டும் என்பதை உணர்ந்தனர். போராடி, வெற்றி பெற்றனர்.

சுரண்டுகிற, அடக்கு முறை கொண்ட பேரரசுகள் மேல் கடவுளின் தீர்ப்பு எப்படி வருகிறது என்பதைத் தியான வசனம் காட்டுகிறது. முதல் நூற்றாண்டிலே கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் அனுபவித்த பாடுகள், வேதனைகள், நெருக்கங்கள் ஏராளம். நிர்வாணப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டனர், கொடுமைகளைக் கேவலங்களைச் சந்தித்தனர். ஆனாலும் இயேசுவை மறுதலிக்கவில்லை, அவரை நம்பி, அவரைச் சாட்சியிட்டனர். இறுதி வெற்றி தங்களுக்கே என்று விசுவாசிகள் அறிந்திருந்தனர். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்தெடுக்கப் பட்டவர்களின் முடிவு ஜெயமே என்று நம்பினர். தோல்வியில் சிக்குண்டிருக்கிறோம் என்று கவலைப்படுகிறீர்களா? ஜெயம் கொடுக்கிற இறைவன் இயேசு நம்மோடிருக்கிறார். நாம் கடவுளால் அழைக்கப்பட்டவர்கள், தெரிந்தெடுக்கப்பட்டவர்கள். சரீரத்தில் இருக்கிறவரைக்கும் பலவீனம், வியாதி, ஊனம் போன்றவை நம்மைப் பாதிக்கும். இவை தவிர்க்க முடியாதவை. உலகத்தில் வாழுகிற வரைக்கும் பஞ்சம், இயற்கை நாசம், வஞ்சகம், சூது, தொல்லைகள் நமக்கும் சொந்தமாகிவிடும். இவற்றை முற்றிலும் நீக்க முடியாது. ஆனால் நாம் கடவுளால் உயர்நிலைக்காக அழைக்கப்பட்டவர்கள், தெரிந்தெடுக்கப் பட்டவர்கள் என்ற திட நம்பிக்கையுடன் வாழ்வைச் சந்திப்போம்.

ஜெயம் கொடுக்கிற இறைவா, தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் இறை நம்பிக்கையில் நிலைத்து வாழ அருள் தாரும். நாங்கள் உம்மால் தெரிந்தெடுக்கப்பட்டதற்காக தோத்திரம். உயர்நிலை அடையும் வரை எம்மைக் காத்தருளும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.