2 நாளாகமம் 1 : 4-23 26 ஜூலை, 2020 ஞாயிறு
“கடவுளுக்குப் பயப்படுகிற பயத்தைப் போதித்து வந்த சகரியாவின் நாட்களிலே கடவுளைத் தேடிவந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாளெல்லாம் கடவுள் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.” – 2 நாளாகமம் 26 : 5
பழைய ஏற்பாட்டின் காலத்தில் தொழுநோய் ஒரு தீட்டான நோய். நோயாளிகள் சமூகத்திலிருந்தும், குடும்பத்திலிருந்தும் பிரிந்து ஊருக்கு வெளியே கூட்டமாக வாழ்ந்து வந்தனர். இன்றைக்கு தொழுநோய் ஒழிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தியான பகுதியில் தொழுநோய் பிடித்த அரசன் உசியாவைப் பற்றி பார்ப்போம். இவனுடைய மறுபெயர் அசரியா. அமத்கியா கொல்லப்பட்டபோது, யூதா ஜனங்கள் பதினாறு வயதுள்ள, அவன் மகனாகிய உசியாவை அரசனாக்கினார்கள். உசியா ஏலாதைக் கட்டி யூதாவின் வசமாக்கினான். அவன் ஐம்பத்திரண்டு வருடம் எருசலேமில் அரசாண்டான். அவன் தாயின் பேர் எக்கோலியாள், அவள் எருசலேம் நகரத்தாள். அகன் தகப்பன் அமத்கியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வையில் நேர்மையானதைச் செய்து வந்தான்.
உசியாவிடம் மூன்று லட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறு பேர் அடங்கிய படை இருந்தது. கோபுரங்கள் மேலும், அலங்கக் கோடிகள் மேலும் நின்று அம்புகளையும், பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு மிகவும் சாமர்த்தியமாய் அமைந்த இயந்திரங்களையும் எருசலேமில் செய்தான்.
உசியாவின் புகழ் வெகுதூரம் பரவிற்று. அவன் பலமடைந்தான். அவன் மனம் கர்வங்கொண்டது. அவன் கேடானவைகளைச் செய்து தன் கடவுளாகிய கர்த்தருக்குத் துரோகம் பண்ணினான். அவன் தூப பீடத்தின் மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். அது ஆசாரியனின் வேலை. ஆசாரியனாகிய அசாரி இதை எதிர்த்தார். எச்சரித்தார். உசியா கையில் தூபக்கலத்தோடு, ஆசாரியர் மீது கடுங்கோபம் கொண்டவனாய் நிற்கும்போதே அவன் நெற்றியில் தொழுநோய் துவங்கியது. பின்பு தொழுநோயாளியாகவே தனித்து ஒரு வீட்டில் வாசம் பண்ணி வந்தான். தொழுநோயாளியாகவே இறந்தான்.
கடவுள் நம்மை கிருபையாக உயர்த்துகிறார். இதை நாம் மறந்து விடக்கூடாது. உழைப்பால், செல்வத்தால் உயர்வடையும் போது உயர்த்துகின்ற கடவுளை மறந்து தலைகர்வம் கொள்ளுதல் அழிவை கொண்டு வரும். கடவுளின் பரிசுத்த இடங்களில் பாவத்தை உணருகிறவர்களாக தாழ்மையுள்ளவர்களாக நமக்கு கடவுள் தருகின்ற பணியை பணிவோடு கடவுள் பயத்தோடு செய்வோம்.
கடவுளே, உம் பரிசுத்த பிரசன்னத்தை உணர்ந்து எங்கள் பொறுப்புகளை மட்டும் செய்யவும், உம் பரிசுத்தத்தைக் குலைத்து போடாமல் நீர் விரும்பும் வாழ்க்கை வாழ பெலன் தாரும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.
