மார்க்கு 6 : 45-52 19 பிப்ரவரி, 2018 திங்கள்
“அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசமென்று எண்ணிச் சத்தமிட்டு அலறினார்கள்.” – மார்க்கு 6 : 49
இப்பகுதியைத் திரும்பவும் ஒருமுறைப் படித்துப் பாருங்கள். சில வினைச் சொற்கள் தொடர்ந்து வருகின்றன. கண்டார்கள், கலக்கமடைந்தார்கள், ஆவேசமென்றார்கள், சத்தமிட்டார்கள், அலறினார்கள். இத்தனையும் ஏன் நடந்தது? அவர்கள் எல்லாரும் இயேசுவைக் கண்டார்கள். இயேசு கடலின் மேல் நடக்கிறதைக் கண்டார்கள்.
வலைகிழியும் அளவுக்கு பேதுரு என்பவருக்கு அற்புதமாக மீன் கிடைக்கச் செய்தார் இயேசு. பேதுரு பயந்து, என்னைவிட்டுப் போய்விடும் என்றார். கதரேனர் எனும் ஊரில் கல்லறையில் திரிந்த, பேய் பிடித்தவனைச் சுகப்படுத்தச் சென்றார் இயேசு. பேய் பிடித்தவன் இயேசுவிடம் எங்களை வேதனைப்படுத்தவா வந்தீர் என்றான்.
கப்பர்நகூம் எனுமிடத்தில் ஓர் ஜெபாலயம். அங்கே அசுத்த ஆவி பிடித்தவனைக் குணப்படுத்த இயேசு சென்றார். ‘எங்களைக் கெடுக்கவா வந்தீர்’ என்று அவன் கேட்டான்.
அற்புதத்தைக் காண மனிதமனம் தவிக்கின்றது. கண்டால் அச்சப்படுகின்றது. இயேசு மனிதனை அச்சப்படுத்த விரும்பாமல் தான், தமது இரட்சிப்பின் பணியைச் சாதாரண சாமானிய வழியில், சிலுவையில் சாவில், அவமானத்தில் சாதித்து முடித்தாரோ!
ஆவேசம் என நீங்கள் அலறாமல் இருக்க மிகச்சாதாரணமாக இயேசு உங்களோடு உலவுகிறார். குழந்தையில், அண்டை அயல்வீட்டாரில், ஆசிரியரில், சபை குருவில், வேத வசனத்தில், தியானமலரில் அமைதியாகத் தன்னை வெளிப்படுத்துகிறார் இயேசு. அமைதியான முறையில் உங்கள் அச்சம் போக்குகிறார். சாதாரண வழியில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார். இயற்கையான முறையில் உங்களை வளரச் செய்கிறார். உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் கிருபையாக இயேசு உங்களுக்காகச் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார்! செயல்படும் ஆண்டவரோடு எப்போதும் இணைந்திருங்கள்.
ஆண்டவரே! நீங்கள் அற்புதமாகச் செயல்படும் பொழுது எங்கள் அச்சத்தை நீக்குங்கள். அமைதியாய் செயல்படும்போது உங்களை அடையாளங் காட்டுங்கள். இயேசுவின் வழியே ஆமேன்.
