1 யோவான் 5 : 18-20                                       20 ஆகஸ்ட், 2019 செவ்வாய்

“…விசுவாசத்தின் மூலமாய்க் கடவுளின் வல்லமையினால் காக்கப்பட்டு வருகிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.” – 1 பேதுரு 1 : 5

தகப்பனின் சொத்து தனக்குக் கிடைத்து விட்டது என்பதற்காக தலைகால் புரியாமல் வாழ்ந்து கெட்டவர் பலர். உழைக்காமல் கிடைத்த செல்வத்தை உயர்வாகப் பேணிக் காத்தவரும் சிலர்.

பாவத்தின் பிடியிலிருந்து விடுபடுவதே இரட்சிப்பு எனும் இலவச இறைச் செல்வம். இயேசு கிறிஸ்துவின் வழியாகப் பாவமன்னிப்பு என்கிற இந்த விடுதலை இலவசமாகக் கடவுளால் தரப்படுகிறது. விசுவாசத்தினால் இந்த சிலாக்கியத்தை நாம் ஏற்று அனுபவிக்கிறோம். அனுபவிக்கின்ற இந்த சிலாக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா? என்னால் அது முடியுமா? நிச்சயமாக என் சுயபலத்தால் இது முடியாது. ஏனென்றால் தீய சக்திகளை நான் நேசிக்கிறேன். நல்லவைகளைச் செய்ய வேண்டும் என்று பல பொழுது நினைத்தேன். ஆனாலும் தீயவற்றைச் செய்கிறேன். மீட்கப்பட்ட பிறகும் ‘விழுந்து விடும்’ இந்த நிலை என்னிடம் மட்டுமல்ல நம் எல்லோரிடமும் உண்டு. கடவுளின் கிருபை நம்மைப் பலப்படுத்துகிறது. கர்த்தரின் ஆவியானவர், கடவுளின் பிள்ளைகள் நாம் என்பதைத் திரும்பத் திரும்ப தேவ வசனத்தின் வழியே நினைவுபடுத்துகிறார். கடவுளின் பிள்ளைகள், கடவுளின் சொத்தின் சுதந்திரவாளிகளல்லவா! இந்தப் பரலோகச் சுதந்திரத்தை நிறைவாக அனுபவிக்கும் வரை, கடவுளின் கிருபை நம்மைக் காத்துக் கொள்ளுகிறது. சுதந்திரவாளிகளாக்கிய ஆண்டவர், பெற்ற சுதந்திரத்தைப் பத்திரமாக அனுபவிக்கவும் நமக்குத் துணையாக -பலமாக இருக்கிறார். கிறிஸ்துவின் வாரிசுகளாகிய நாம், தீயோனின் வலைக்குள் சிக்கி விடாதபடி கர்த்தர் தாமே நம்மைப் பாதுகாக்கிறார்.

பிள்ளைகள் என்ற உரிமை பெற்றோம். உண்மையான பிள்ளைகளாய் வாழ தேவ கிருபையில் சார்ந்திருப்போம். விசுவாசம் எனும் கிருபையைச் சார்ந்து வாழ்கின்ற நிலை கடவுளின் இலவச அருட்கொடை. இதை வீணாக்காதிருப்போம்.

அப்பா பிதாவே என்று அழைக்கும் பாக்கியம் தந்தவரே! நன்றி செலுத்துகிறோம். உமது பிள்ளைகளாக வாழ வளர பலம் தாரும். கிருபையிலே நிலைத்து வாழுகின்ற ஆவலையும் அருளையும் வீணாக்காதிருக் கின்ற ஆவியையும் தந்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.