சங்கீதம் 51 : 9-12 09 அக்டோபர், 2021 சனி
“தந்தையைத் துன்படுத்தி…. இலச்சையும் அவமானமும் விளைவிக்கும் மகன்.” – நீதிமொழிகள் 19 : 26
தந்தையின் நிலையிலிருக்கும் எவரும் நிந்திக்கப்படலாகாது. நமது பரம தந்தையின் விருப்பம் இது. தந்தை-தாய் ஸ்தானம் என்பது மனித உலகில் மட்டுமல்லாது ஒட்டு மொத்த சிருஷ்டியிலும் மிகப் பெரிய அந்தஸ்து. இவர்களுக்கு நிந்தை, அவமானம் என்ற நிலைக்கே இடமில்லாது பார்த்துக் கொள்ள வேண்டியது பிள்ளைகளின், இதர இளையவர்களின் பொறுப்புமாகும். பெற்றெடுத்த பிள்ளைகளால் தந்தையோ தாயோ நிந்திக்கப்படுதலை விலக்க கடவுளின் வார்த்தை கண்டிப்புடன் கட்டளையாகவே கூறியுள்ளது. தாயையும் தந்தையையும் கனம் பண்ணுதல் என்பது வாக்குத்தத்தத்தோடு கூடிய இறையாணை என பவுல் காட்டியுள்ளார். இறை ஆணையை மீறி, தாய் தந்தையரைத் துன்புறுத்தி கனவீனப்படுத்தினால் அதற்குரிய தண்டனை தாங்கொணாதது என்றும் கடவுள் எச்சரித்துள்ளார்.
சாதாரணமாக எவரையும் ஏளனம் செய்து இழிவுபடுத்துபவர்கள் கூட தங்கள் தாயையோ தந்தையையோ யாராவது இழிவாகப் பேசி விட்டால் பொறுத்துக் கொள்வதில்லை. ‘அம்மாவை மட்டும் பேசாதே.. பெரியவங்களை அவமானப்படுத்தாதே’ என கோபத்துடன் எச்சரிக்கின்றனர். நம்மை ஈன்றவர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே கூட தாயையும் தந்தையையும் மதிப்புடன் நடத்த வேண்டியது நம் கடன்.
சுனில் பனிவல் என்பவர் நெல்லை மாவட்ட கலெக்டர் ஆனார். அவரைக் காண வந்த அவரது பெற்றோரை அழைத்துச் செல்ல நெல்லை ரயில் நிலையத்துக்கு வந்தார் கலெக்டர். ரயிலிலிருந்து பெற்றோர் இறங்கியதும் அங்கேயே, எல்லார் முன்னிலையிலும் பெற்றோரின் பாதங்களைத் தொட்டு வணங்கி வீட்டுக்கு அழைத்துச் சென்றார் என ஒரு செய்தி சொல்லப்பட்டது.
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.’ அவர்கள் நிந்தைக்காளாகாதபடி பார்த்துக் கொள்வது நம் கடமை. இயேசு நிந்திக்கப்பட்டார், இலச்சையடைந்தார். மனித இனத்தின் பாவத்தைச் சுமந்தார். இந்த இலச்சை இரட்சிப்பின் காரணம் ஆயிற்று. அன்றோடு பிறரை நிந்திப்பது முடிவுக்கு வந்தது எனக் கொள்வோம். வயதானவர்களை நிந்திக்கும் நோக்கில் நமது நாவுகள் நீளாதிருக்க இறையவர் நம்மைக் காக்கட்டும்.
பரம தந்தையே, எங்கள் தாய் தந்தையரை மதிப்புடன் நடத்திட எங்களுக்கு அருள் தாரும். இயேசுவின் வழியே ஜெபம் கேளும் பிதாவே. ஆமேன்.