தரிசனம் 22 : 3-5                     15 ஆகஸ்ட், 2021 ஞாயிறு

“கடவுளின் மகிமையே அதைப் பிரகாசித்தது. ஆட்டுக் குட்டியானவருமே அதற்கு விளக்கு.” – தரிசனம் 21 : 23

நம் இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பொன்னாள் இந்நாள். இந்திய மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தொடங்கிய நன்னாள் ஆகஸ்ட் பதினைந்து. அந்நிய ஆதிக்க விலங்கை ஒடித்து விடுதலைப் பெற்றது இந்தியத் திருநாடு. இருப்பினும் உண்மை நிலை என்ன? ‘நள்ளிரவில் நாம் சுதந்திரம் பெற்றோம். இன்னும் விடியவில்லை’ என்றார் ஒரு கவிஞர்.

நமது தேசத் தந்தையின் தியாகம் விடுதலைக்குப் பாதை போட்டது. ஆனால் இன்றைய நிலை என்ன?… தியாகமற்ற மக்கள் தலைவர்கள், அரசியல்; கடமை மறக்கும் அதிகாரிகள், லஞ்ச லாவண்யங்கள், கொலைகள், கொள்ளைகள், திவீரவாதச் செயல்கள். சமய வெறி; சாதீயம் போன்றவை நம் நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது ‘இந்தியா ஒளிர்கின்றதா?’ என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது.

இன்றையத் திருமறைப் பகுதியில் யோவான் கண்ட ‘புதிய வானம், புதிய பூமி’ பற்றின வெளிப்பாடு இடம் பெற்றுள்ளது. இதில் ஆட்டுக் குட்டியானவராகிய கிறிஸ்துவே ஒளியாக இருக்கின்றார் என்று எழுதி வைத்தார். பெத்லகேமில் தோன்றிய ‘அவருடைய மகிமையைத் தரிசித்தோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருக்கேற்ற மகிமையாயிருந்தது’ என்றும் சத்திய வேதத்தில் நாம் வாசிக்கிறோம்.

சவனரோலா என்பவர் சிறந்ததொரு பக்தர். இவர் ஒரு குருத்தோலைத் திருநாள் அன்று பிளாரன்ஸ் நகரில் பிரசங்கித்தார். அப்போது, ‘பிளாரன்ஸ் பெருநகருக்கு இயேசு தேவை’ என்றார். இதுபோன்று இந்திய நாட்டுக்கு இரட்சகர் இயேசு தேவை. ‘நானே ஒளி’ என்ற இயேசு தேவை. ஒளி வந்தால் இருள் ஓடி விடுமே! இது இயற்கை நியதி. ஆகவே இந்தியா ஒளிர ஆட்டுக்குட்டியானவரின் வெளிச்சம் இந்தியாவுக்குத் தேவை என்று தான் சொல்ல வேண்டும். யோவான் கண்ட தரிசனம் இந்தியாவில் நிதர்சனமாகட்டும்! உலக அரங்கில் நம் நாடு ஒளிரட்டும்! ‘இயேசுவால் இந்தியாவில் விடியல் வந்து விட்டது’ எனக் கூறும் காலம் கனியட்டும்! நம் நாட்டிற்காக ஜெபிப்போம்! ஒளி வீசிட உழைப்போம்! நாட்டுத் தலைவர்கள் நலமுடன் வாழ்ந்திட தேவ அருள் நாடுவோம்.

உலகின் ஒளியே! இருள் மண்டிக் கிடக்கும் எங்கள் இந்திய நாட்டை ஒளிரச் செய்யும். அதற்கென உழைக்க அடியாருக்கு உமது கிருபையைத் தந்தருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.