1 தீமோத்தேயு 5 : 6-8 29 ஜனவரி 2026, வியாழன்
“தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக் கடவன்.” – மார்க்கு 8 : 34
வயதான பெண்மணி ஒருவர் தனது ஓய்வு காலத்தில் ஆண்டவரின் ஊழியத்தை செய்து கொண்டிருந்தார். அதிகம் வீட்டை விட்டு வெளியே போவதில்லை தள்ளாமை காரணமாக. தன்னைத் தேடி வருகிறவர்களிடம் மட்டும் நற்செய்தியை சொல்லுவார். அப்படி வந்த ஒருவர், ‘வசதியா வாழனும்னு நினைச்சு எக்கச்சக்கமா கடன் வாங்கிட்டேன். இப்ப என்னால அடைக்க முடியல. நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் இந்த கடனை எல்லாம் கடவுள் அடைச்சிருவாரா’ என்று கேட்டார். அந்தப் பெண்மணி கடனை நீ வாங்கினாய்… நீதான் கட்ட வேண்டும். கடவுள் அதற்கு உனக்கு துணையாக இருப்பார் என்று சொன்னார். கிறிஸ்தவ வாழ்வு சிலுவைதான் என்பது அவருக்கு உணர்த்தப்பட்டது.
இன்றைய தியான வசனத்தின் சூழலைப் பாருங்கள். இயேசு கலிலேயா கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் சீடர்களோடு பேசுகிறார். அருகே உள்ள பிலிப்பு சிரியா பட்டணத்து மக்கள் அங்கே கூடியிருந்திருக்க வாய்ப்பு உண்டு. இயேசுவை தங்கள் அரசராக எண்ணிய மக்களுக்கும் சீடர்களுக்கும் இயேசு சொன்ன வார்த்தைகளே இன்றைய தியானப் பகுதி. என்னை பின்பற்றுகிறவர்கள் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதுதான் இதன் பொருள். அக்காலத்தில் சிலுவை என்பது மரணம் என்பதன் அடையாளமாகவும் இருந்தது.
இன்றைக்கான தியான வசனம் இன்றைய சமூகத்திற்கு திரும்பத் திரும்ப அழுத்தமாக சொல்லப்பட வேண்டிய ஒரு வசனம் ஆகும். ஏனென்றால் இயேசு ஆண்டவரை விசுவாசித்தால் வாழ்க்கையில் கஷ்டங்கள் வராது, துன்பங்கள் வராது, சோதனைகள் வராது என்று நம்புகிறவர்கள் எண்ணிக்கை மிக மிக அதிகம். கிறிஸ்தவ வாழ்வு என்பது சிலுவை சுமப்பதுதான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய பாரங்களை சுமக்க ஆண்டவரின் கரம் நமக்குத் துணை இருக்கும். அது போலவே இயேசுவை விசுவாசிக்கிறோம் என்ற காரணத்தினாலேயே நமக்கு வந்து சேருகிற சிலுவைகளின் எண்ணிக்கை அதிகமாகும். இந்த உண்மைகளை நாம் புரிந்து கொள்வதும் ஏற்றுக் கொள்வதும் நம்முடைய விசுவாசத்தை பலப்படுத்தும்.
நம்முடைய பாவங்களுக்காக சிலுவை மரணத்தை ஏற்ற இயேசு ஆண்டவர் நமக்கு பாவத்திலிருந்து மீட்பை கொடுத்திருக்கிறார். மீட்கப்பட்ட நாம் கிறிஸ்தவ வாழ்வின் சவால்களை ஏற்றுக் கொள்வதற்கு தயங்கக் கூடாது. இந்த விசுவாச உறுதி நம் அனைவருக்குள்ளேயும் எப்போதும் இருக்க வேண்டும். சலனங்கள் வரலாம், சஞ்சலங்கள் வரலாம். ஆனால் அவற்றிலிருந்து நாம் மீண்டு திரும்பவும் இயேசுவிடம் வந்து சேர வேண்டும். அதுவே கிறிஸ்தவனின் விசுவாச அடையாளம். நம்முடைய வாழ்வு சிலுவைப் பயணமாகட்டும். இதில் வருத்தப்பட ஏதுமில்லை. ஏனென்றால் நம்மோடுகூட நம்முடைய சிலுவையை சுமக்கிறவர் இயேசு. இந்த நிச்சயத்தோடு வாழுவோம்.
என்றென்றும் எங்களோடு இருக்கிறவரே! உமது மகனால் நாங்கள் மீட்கப்பட்டு இருக்கிறோம். உமது பிள்ளைகளாக வாழ்ந்திருக்க நாங்கள் சிலுவையை சுமக்கவும் துன்பங்களை சகிக்கவும் எங்களை பலப்படுத்தும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.
