புலம்பல் 1 : 20-22 11 ஜுன், 2018 திங்கள்
“நீதிமானுக்கு நேரிடும் தீங்குகள் அநேகம், அவைகளெல்லாவற்றினின்றும் கர்த்தர் அவனை விடுவிப்பார்.”
– சங்கீதம் 34 : 19
நல்லவர்களுக்கும் துன்பங்கள் வருகின்றன. அது ஏன்? இறைவன் நல்லவர்களில் அன்பு வைக்கவில்லையா? நெருங்கிய உறவில் துன்பத்தின் வழியாகவும் நல்லவர்களைத் தம்முடன் இன்னும் நெருக்கமாகச் சேர்ப்பது இறைவனின் நோக்கம். எல்லாவற்றையும் நன்மைக்கேதுவாய் ஒத்து நடக்கச் செய்வேன் என இறைவன் வாக்குக் கொடுத்திருக்கிறாரே. கர்த்தர் தமது தாசரை மீட்டுக் கொள்ளுகிறார் என இச்சங்கீதத்தில் வாசிக்கிறோம்.
தமது பிள்ளைகளுக்கு துன்பம் துயரம் வருங்காலத்தில், அவர்களை விடுவித்துக் காப்பதோடு மட்டுமல்ல, அச்சமயங்களில் தமது பிள்ளைகள் பாவம் – தவறு செய்யாதபடிக்கும் பாதுகாக்கிறார் கடவுள். இயேசு கிறிஸ்துவுக்குள் இறைவன் நம்மையும் அவரது பிள்ளைகளாக்கி நீதிமான்களாக்கியிருக்கிறார். அவரது பிள்ளைகளின் இலட்சணத்தோடு நாம் வாழ முற்படும்போது, சோதனை, துன்பம், துயரங்கள் நம்மையும் அணுகலாம். ஆனாலும் அவர் நம்மைப் பாதுகாப்பார், அல்லது அவற்றைத் தாங்கும் சக்தி தருவார்.
ஆண்டவரின் சித்தத்திற்கேற்ப நாம் வாழாமல், நமது இச்சைக்கேற்ப வாழும்போது, சிலபொழுது அமோகமாக வாழ முடியும். இத்தகைய வாழ்க்கையின் வீழ்ச்சிகளிலிருந்து கடவுள் நம்மைக் காக்கத் துணை செய்வதில்லை. நமது அழிவு நிச்சயம். ஆனால் தவறு செய்யாமலேயே துன்புறுதல் – `கடவுள் நீதிமானாக்கியவர்களின் அடையாளம்’ எனும் உண்மையை உணருவோம். அன்பு காட்டினதால் பிறர் உங்களைக் கேலி செய்யலாம். உதவி செய்ததற்காக நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டியதிருக்கலாம். நியாயத்தைச் சொன்னதற்காக உங்களுக்கு `ட்ரான்ஸ்பர்’ வந்திருக்கலாம். இவை இனிய வேதனைகள்.
நீதிக்காகத் துன்புறும் நீங்கள் பாக்கியவான்கள். `இனிய வேதனைகள்’ இறைவன் அருகில் இருக்கிறார் என்ற உண்மைக்கு அடையாளங்கள்.
கிறிஸ்துவுக்குள் எங்களை நீதிமான்களாக்கிய இறைவா! துன்பங்களைச் சகிக்கத் துணை செய்தருளும். இயேசுவின் வழியே ஆமேன்.
