மாற்கு 11 : 1-10                              10 ஏப்ரல் 2022, ஞாயிறு

“கர்த்தரின் நாமத்தில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.” – மாற்கு 11 : 9

இயேசு ஊழியத்தை ஆரம்பித்த நாள் முதல் ஒவ்வொரு அடியும் எருசலேம் நோக்கித்தான் இருந்தது. தம் சீடர்களுக்கு தமது மரணத்தைக் குறித்து தெளிவாக போதித்தார். மனுக்குல மீட்புக்காக எருசலேமில் இரத்தஞ் சிந்தி மரிக்க வேண்டும் என்பதை இயேசு அறிந்திருந்தார்.

இப்பொழுது இயேசு மரணத்தை எதிர்கொண்டு எருசலேம் நோக்கி பயணத்தை ஆரம்பித்தார். இது திட்டமிட்ட பயணம். தீர்க்க தரிசனம் நிறைவேற சீடர்களிடம் கிராமத்திற்குச் சென்று தாம் பயணம் செய்ய ஒரு கழுதையை கொண்டு வரச் சொன்னார்.

கழுதையின் மீது இயேசு அமர்ந்தார். இந்த பயணம் கல்வாரியில் தான் முடியும் என்று இயேசுவுக்குத் தெரியும். இந்த கழுதை தன்னை சுமக்கிறது. விரைவில் சிலுவையை தான் சுமக்க வேண்டும் என்பதையும் அறிவார்.

மறுரூப மலையில் மறுரூபமான இயேசு மோசேயோடும், எலியாவோடும் சிலுவை மரணத்தைக் குறித்து பேசினார். கழுதை மீது இயேசுவைக் கண்ட மக்கள் தங்கள் ஆடைகளை தரையில் விரித்தார்கள். குருத்தோலைகளை கைகளில் ஏந்தினார்கள். முழுமையாக சரணாகதியடைந்து ஓசன்னா வெற்றிப் பாடல் பாடினார்கள்.

‘ஓசன்னா’ என்ற சொல்லுக்கு ‘ஆண்டவரே மீட்டருளும்’, ‘ஆண்டவரே வெற்றியருளும்’ என்று பொருள். ஓசன்னா என்றால் காப்பாற்றும் என்றும் பொருள் உண்டு. அதே வேளையில் இப்பாடல் மீட்பை எதிர்நோக்கும் பாடலும் கூட.

இந்த வாரம் புனித வாரம். நாமும் இப்பயணத்தில் இயேசுவோடு பயணப்படுவோம். இப்பயணத்தில் பங்கடைகின்றவர்களை சிந்தித்துப் பார்ப்போம். கழுதையின் உரிமையாளர் கழுதையை இழந்தார். மேலாடை அணிந்திருந்தவர்கள் தங்கள் மேலாடைகளை இழந்தார்கள். ஒலிவமரம் தன் கிளைகளை இழந்தது. இயேசு நமக்காக தம் இன்னுயிரை இழந்தார்.

இயேசுவின் பயணம் இலட்சியப் பயணம். அகிம்சையின் பயணம். சாந்தமான பயணம். இப்பயணத்தில் பங்கடைய கடவுள் நம்மை அழைக்கிறார். நாம் இயேசுவை பின்பற்றி, அவர் அடிச்சுவடுகளை விண்ணக வாழ்வுக்கு நேராக பயணிப்போம்.

இயேசுவின் பயணம் கல்வாரி மலையில் அவர் சிந்திய இரத்தத்தால் முற்று பெற்றது. தன் வழியாக மனுக்குல நித்திய வாழ்வை பெற வாசல் திறந்தது. இதுவே பிதாவின் சித்தம். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதே தமது போஜனம் என்று இயேசு சொன்னார். அதை தமது கண்ணும் கருத்துமாக சிலுவையில் நிறைவேற்றி வெற்றி கண்டார்.

நம்மை இயேசுவின் இரத்தத்தால் தூய்மையாக்குவோம். வெற்றியின் பாடல்களை பாடி விண்ணக வாழ்வில் இடம் பெற சிலுவையை பெறுமையோடு சுமப்போம். நம்பிக்கையோடும் விசுவாசத்தோடும் வாழ்வோம்.

கடவுளே! இயேசு சம்பாதித்த மீட்பை, சிலுவையை நாங்களும் பொறுமையோடு சுமந்து பெற்றுக் கொள்ள உதவி செய்யும். இயேசுவில் பிதாவே ஆமேன்.