2 கொரிந்தியர் 11 : 20-22 11 செப்டம்பர் 2025, வியாழன்
“ஆவியின் தரித்திரர் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” – மத்தேயு 5 : 3
ஒரு பிச்சைக்காரன் கந்தலான ஆடையோடு தாராள மனசுள்ள இராஜாவை சந்திக்க சென்றான். இராஜா உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பிச்சைக்காரன், அரசே நான் ஏழை, என்னிடத்தில் ஒன்றும் இல்லை. நான் வெறுமையானவன் என்றான். அதற்கு இராஜா, நல்லது உன்னிடத்தில் ஒன்றும் இல்லாத நிலையில் நான் உனக்கு நன்மை செய்வேன் என்று சொல்லி உதவினார். பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி, புதிய வாழ்வு பெற்றவனாய் மனநிறைவோடு வாழ்ந்தான்.
இன்றைய தியானபாகத்தில் பாக்கிய வசனங்களின் முதல் பாக்கிய வசனம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டவர் இயேசு தமது மலைப்பிரசங்கத்தின் முதற் பகுதியாக பாக்கிய வசனங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்பது பாக்கிய வசனங்களில் முதலாவது, ஆவியில் தரித்திரர் என்பதாகும். பரலோக இராஜ்யம் அவர்களுடையது என்று குறிப்பிடுகிறார்.
நான் வெறுமையானவன், ஒன்றுமில்லாதவன். என் வாழ்வு முழுவதும் கடவுளைச் சார்ந்தது என்று, முழுவதுமாக நம்பி வாழ்கின்ற வாழ்விற்கு ஆவியில் தரித்திரர் என்று சொல்லப்படுகிறது. இன்று வேகமாக போய்க்கொண்டிருக்கிற உலகில் மனிதர்கள் தங்களது பணத்தை, கல்வியை, செல்வாக்கை சார்ந்து வாழ்கின்றார்கள். கடவுள் எதிர்பார்ப்பது அவரையே சார்ந்து வாழ்கின்ற வாழ்க்கையாகும். ஒருமுறை இருவர் ஜெபிப்பதற்காக ஆலயத்திற்குச் சென்றனர். ஒருவர் சுயநீதியோடு ஜெபிக்கிறார். மற்றோருவர் கடவுளை ஏறெடுத்துப் பார்க்கத் துணியாமல் கடவுளே பாவியாக எனக்கு இரங்கும் என்று மன்றாடுகிறார். ஆண்டவர், அவனல்ல (சுயநீதியோடு ஜெபித்தவன்) இவனே (தன்னை தாழ்த்தி ஜெபித்தவனே) நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட்டவன் என்று குறிப்பிடுகிறார்.
கடவுள் இயேசுவில் செயல்படுகிறார். நம்மை அவரின் பிள்ளைகளாய் ஏற்றுக்கொண்டுள்ளார். பரலோக இராஜ்யம் நமக்குரியது. நமது வாழ்வு கடவுள் கொடுத்தது என்று விசுவாசித்து அவரை சார்ந்து வாழ தூயாவியானவர் துணை செய்வார்.
அன்பின் கடவுளே, உமது குமாரனில் எங்களை உம்முடைய பிள்ளைகளாய் ஏற்றுக் கொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம். நாங்கள் உம்மைச் சார்ந்து வாழ உதவி செய்தருளும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.
