அப்போஸ்தலர் 27 : 20-26 7 ஆகஸ்ட், 2021 சனி
“மனுஷரே, தைரியமாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று கடவுளிடம் நம்பிக்கையாயிருக்கிறேன்.” – அப்போஸ்தலர் 27 : 25
கணவனும் மனைவியும் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தனர். திடீரென கடல் கொந்தளித்தது. கப்பல் கவிழ்ந்து போகும் நிலை ஏற்பட்டது. பயணிகளை மரண பயம் பிடித்துக் கொண்டது. தெய்வங்களை வேண்டினர். ஆனால் கணவர் மட்டும் கலங்கவில்லை. இது அவரது மனைவிக்கு ஆச்சரியத்தை அளித்தது. தெய்வாதீனமாக காற்று அமைதியானது. கணவரின் அமைதிக்குக் காரணம் கேட்டாள். அவர், “கடல் என்னை நேசிக்கிற கர்த்தர் இயேசுவின் கரத்தில் அல்லவா இருக்கின்றது? எனவே தான் அமைதியாக இருந்தேன்” என்றார்.
ஆபத்து நேரத்தில் கர்த்தரில் விசுவாசம் வைத்து தைரியமாக இருப்பவர்கள் நிச்சயமாக கடவுளின் உதவிக்கரத்தைப் பெற்றுக் கொள்ளுவார்கள். பவுலும், சில கைதிகளும் கப்பலில் ஏற்றப்பட்டு இத்தாலிக்குக் கொண்டு போகப்பட்டனர். அப்போது கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. கைதிகள் கலங்கினர்; அச்சமுற்றனர். அப்போது பவுல் கூறியதுதான் இன்றைய தியான வார்த்தைகள். ஆண்டவர் இயேசு தன்னைக் காப்பார் என நிச்சயித்திருந்தார். பிறரையும் தைரியப்படுத்தினார்.
இன்றும் வாழ்க்கைப் புயலில் தத்தளிப்போர் பலர் உண்டு. பாதுகாப்பான மாலுமியாகிய இயேசு நமக்கு இருக்கின்றார் எனக் கூறுவோம். பிறரையும் தைரியப்படுத்துவோம். காற்றும் கடலும் இயேசுவுக்குச் சொந்தம். இயற்கை இறைவனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. படைத்தவரின் கட்டுப்பாட்டில் படைப்பு இருப்பதில் ஆச்சர்யம் இல்லையே. இயேசுவின் விசுவாசிகளுக்கு இதை விடப் பெரிய தைரியம் வேண்டுமா? எவ்வித ஆபத்தையும் கண்டு கலங்காதீர்கள். தைரியமாயிருங்கள். உங்களைப் படைத்தவர், ஆண்டுகொண்டிருக்கிறவர் உங்களோடிருக்கிறார்.
எங்கள் பாதுகாவலரே! ஆபத்து நேரத்திலும் அடியாரோடு இருக்கின்றீர் என்ற உறுதியைத் தந்தருள்வீராக. ஆபத்து வேளையிலும் உம் கரத்தைப் பிடித்து தைரியமாக பயணித்திட கிருபையருள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமேன்.