சங்கீதம் 98 : 3-6 11 டிசம்பர் 2021, சனி
“பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, … தம் தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார்.” – லூக்கா 1 : 54-55
‘இஸ்ரவேல் குடும்பத்திற்குத் தாம் பாராட்டின கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார் கர்த்தர்’ என்று வாசிப்புப் பகுதியில் பாடல் ஆசிரியர் பாடி வைத்தார். கர்த்தர் செய்தது அதிசயம். அது அவருக்கு வெற்றியளித்தது. பூமியின் எல்லை எல்லாம் கடவுள் அடைந்த வெற்றியைக் கண்டது என்றும் பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. கர்த்தரின் இரட்சிப்பின் திட்டம் மனிதருக்குக் கிடைத்த மிகப் பெரிய ‘கடவுளின் ஆதரிப்பு!’, மிகப் பெரிய வெற்றி! என்று விளக்கினார் மரியாள்.
இத்தனை பெரிய விடுதலைச் செயலைக் கடவுள் செய்ய மனிதர் செய்த நன்மையென்ன? புண்ணியம் என்ன? ஒன்றுமேயில்லை. இஸ்ரவேலருக்குத் தான் சொன்னபடியே இரட்சிப்பின் ஆதரிப்பைக் கொடுத்தார். இயேசுவைப் பிறக்கச்செய்தார், இயேசு வழியே பாவங்களிலிருந்து ஜனத்தை மீட்டார். இம்மானுவேலாகி கிருபையும் சத்தியமும் உள்ளவராக நம்மோடிருக்கவே இயேசுவை இந்த உலகத்திற்குள் தந்தார். இந்த அதிசய ஆதரிப்பு – வித்தியாசமான விடுதலை – இலவச மீட்பு நமது கண்களில் அற்பமாகத் தெரிகிறது. மீட்பு, பாவமன்னிப்பு, நீதிபரராகத் தீர்ப்புப் பெறுதல் இலவசம் என்று தான் வேதம் விளக்குகிறது. ஆனால் இதற்கு விலையாக இயேசு, குற்றமில்லாத இயேசு, குற்றமாக்கப்பட்டு சிலுவையில் இரத்தம் சிந்தி இறந்தார். நமது பாவங்களை இயேசு சுமந்து தீர்த்தார். ஆகவே தான் நமக்கு மீட்பு இலவசமாயிற்று. எனவே நமது மீட்பு அதிகவிலையுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்வோம். இஸ்ரவேலை ஆதரித்த கடவுள், இதற்காகக் கொடுத்த விலை தமது திருமகனாம் இயேசுவின் உயிர்ப்பலி.
சிலுவை, இரத்தம் சிந்துதல் என்பவற்றை நாம் நினைக்காமல் இருந்தால், கிறிஸ்துமஸ் என்பதன் முழு அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ள முடியாது. சிலுவை இல்லாமல், கிறிஸ்துமஸ் இல்லை. கிறிஸ்துமஸ் என்ற நிகழ்வாகிய இயேசுவின் பிறப்புக்கு, சிலுவை இல்லாமல் சரியான அர்த்தமும் இல்லை. இயேசுவைப் பாலகனாகப் பாருங்கள், வணங்குங்கள், காணிக்கை கொடுங்கள், உங்களையே கொடுங்கள். அதே நேரத்தில், இயேசுவை கொல்கொதாவில் பாருங்கள். சிலுவையில் பாவத்தைச் சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியாகவும் பார்த்து வணங்கி மகிழுங்கள். கர்த்தரின் ஆதரிப்பு இன்றைக்கும் என்றைக்கும் உங்களோடிருக்கும்.
சொன்ன சொல் தவறாத கடவுளே! நீர் உமது திருமகன் வழியாக எமக்குக் கொடுத்த ஆதரிப்புக்கு நன்றி ஸ்வாமி! இந்த ஆதரிப்பில் நாங்கள் என்றைக்கும் மகிழ்ச்சியும் மன நிறைவும் பெற்றிட அருள் தாரும். ஆமேன்.