ஆதியாகமம் 12 : 1-5                            06 மே 2021, வியாழன்

“பூமியின் வம்சங்களெல்லாம் உன்னில் ஆசீர்வதிக்கப்படும்.” – ஆதியாகமம் 12 : 3

ஆபிரகாம் எமோரிய இனத்தைச் சார்ந்தவர். இவ்வினம் நாடோடி இனமாகும். இவர் தந்தை தேராகு சேவின் வழித்தோன்றல்களில் ஒருவர். நாகோர், ஆரான் ஆகியோர் இவரது சகோதரர்கள். மெசபத்தோமியாவிலுள்ள காரான் இவரது ஊராகும். மனுக்குலத்தை மீட்க மேசியா பிறக்க ஒரு சமூகமும் தேவைப்பட்டது. இதற்கு செயல்வடிவம் கொடுக்க கடவுள் ஆபிரகாமை அழைத்தார். அழைக்கும்போது உன்னை ஆசீர்வதிப்பேன். உன்னில் பூமியின் வம்சங்கள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். இதுவே நமது தியானப்பகுதி. ஆபிரகாம் கடவுளின் அழைப்பை ஏற்றார். எழுபத்து ஐந்தாம் வயதில் தம் மனைவி சாராளோடு தன் வீட்டையும் இனத்தையும், தன் நாட்டையும் விட்டு புறப்பட்டார். இவருடன் லோத்துவின் குடும்பமும் இணைந்து கொண்டார்கள். அத்துடன் திரளான கால்நடைகளும் பணியாட்களும் சென்றார்கள். இவர்கள் கானான் நாட்டில் குடியேறினார்கள்.

காலப்போக்கில் ஆபிரகாமின் வேலையாட்களுக்கும் லோத்தின் வேலையாட்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. கடவுளின் வாக்குத்தத்தத்தை நம்பிய ஆபிரகாம் எந்த இடத்தை தேர்வு செய்தாலும் கடவுள் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையில் லோத்து தெரிவு செய்த இடத்தை விட்டுக் கொடுத்தார்.

கடவுள் வாக்குறுதியை மீண்டும் புதுப்பித்தார். ஆபிரகாமோடு உடன்படிக்கை செய்தார். அதன் அடையாளமாக விருத்தசேதனைத்தை ஏற்படுத்தினார். இதை ஆபிரகாமின் வம்சத்தார் உடலில் ஏற்றுக் கொண்டார்கள். ஆபிரகாமின் நூறு வயதில் கடவுள் வாக்களித்தபடி ஈசாக்குப் பிறந்தார். ஈசாக்கு பால்குடி மறந்த போது அவனை கடவுள் பலியிட பணித்தார். ஆபிரகாம் இதற்கு கீழ்ப்படிந்து பலியிடப் போனார். கடவுள் நாட்டைத் தருவேன் என்றார். தந்தார். உடல் செத்துப்போன நிலையில் குழந்தையைத் தந்தார். அக்குழந்தையை பலியிட்டாலும் அவர் வாக்குப்படி ஒரு வம்சம் உருவாக வேறு குழந்தையைத் தர கடவுளால் முடியும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கை ஆபிரகாமுக்கு இருந்தது. இந்த விசுவாசம் அவருக்கு நீதியாக எண்ணப்பட்டது.

கடவுள் ஆபிரகாமை அழைத்து ஒரு சமூகமாக்கினார். வாக்குத்தத்தங்களையும் தீர்க்கதரிசனங்களையும் கொடுத்தார். மேசியாவை இச்சமூகத்தில் பிறக்கச் செய்தார். அவர் வழியாக இஸ்ரவேல் மக்கள் மட்டுமல்ல முழு மனுக்குலமும் மீட்பு என்ற ஆசீர்வாதம் கிடைக்கும்படி செய்தார். இதனால் ஆபிரகாம் பல இனங்களின் தந்தையானார். கடவுள் நம்மை இயேசுவில் அழைத்திருக்கிறார். ஆசீர்வதித்திருக்கிறார். அழைப்பை ஏற்போம். இயேசுவில் மீட்பை ருசிப்போம். நாம் பெற்ற ஆசீர்வாதங்களை குறிப்பாய் இரட்சிப்பின் செய்தியை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளுவோம்.

எங்களோடு உடன்படிக்கை செய்கிற கடவுளே! உம் நேச குமாரன் வழியாக கல்வாரி சிலுவையில் புது உடன்படிக்கை செய்திருக்கிறீர். உடன்படிக்கையின் மக்களாக ஆசீர்வாதங்களை பகிர்ந்து வாழ கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.