எரேமியா 23 : 5-6                                                   01 டிசம்பர் 2021, புதன் 

“தமது பரிசுத்த தீர்க்கதரிசிகள் வாயினால், ஆதிமுதல் அவர் சொன்னபடியே.” – லூக்கா 1 : 69

செல்வம் அவர்கள் ரொம்ப நல்லவரு. அவரு சொன்னா சொன்னபடி செய்வார். அவர் சொல்றதை அப்படியே நம்பலாம் என்று செல்வத்தைப் பற்றிப் பக்கத்து வீட்டு மோசஸ் சொன்னார். வாக்குத் தவறும் இயல்புள்ள சாதாரண மனிதர் ஒருவருக்கே ‘சொன்னபடி செய்வார்’ என்று சொல்லப்படுகிறது. வாக்குத் தவறாத இறையவரின் ‘சொல் வாக்கு’ நம்பத்தக்கது, உண்மையானது என்பதை அறிவோம்!

ஆதி மனிதர் பாவத்தில் விழுந்தனர். பாவத்தின் விளைச்சல் என்னவாக இருக்கும் என்பதை கடவுள் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சொன்னார். இவர்களை பாவத்தில் விழத் தள்ளிய சாத்தானுக்கும் சர்ப்பத்திற்கும், சொன்ன வார்த்தைகளில் வரப்போகிற இரட்சண்யத்தை, விடுதலையைச் (ஆதியாகமம் 3:16) சொன்னார். இதைத் தொடர்ந்து தீர்க்கர்கள் வழியாக; ஆதி முதல் சொன்னபடியே, வரப்போகிற நாட்களில் இரட்சிப்பு வரும் என்று கூறிக் கொண்டிருந்தார். மேசியா, இரட்சகர், தாவீதின் வேர். நீதியின் முளை என்று பலவகையான சொல் வாக்குகள் பயன்படுத்தப்பட்டு இரட்சண்யம் வரப்போவது உறுதி செய்யப்பட்டது.

திருமுழுக்கர் யோவானின் தந்தை பெயர் சகரியா. இவர் பாடிய ஒரு பாடல் தீர்க்கதரிசனமாக உரைத்தது என வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி தான் நமது தியானவரி. இயேசு பிறப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் யோவான் பிறந்தார். இந்த யோவான் ‘மீட்பை உண்டு பண்ணுகிற’ இயேசுவுக்கு முன்னோடியாக நியமிக்கப்பட்டார். இதை மனதில் வைத்துத்தான் சகரியா, ஆதி முதல் கடவுள் தீர்க்கதரிசிகள் மூலம் சொன்னபடியே மேசியா – இரட்சகர், மீட்பை உண்டு பண்ணுகிறவர் வருகிறார் என்றார். மாதத்தின் முதல் நாளில் இறையவர் சொல்வாக்கை நினைப்பது நமக்கு ஆசீர்வாதம். இவ்வருடம் மீண்டும் இறையவர் ‘சொல்வாக்கு’ நமக்கு நினைவுபடுத்தப்படுகிறது. இயேசுவை ஏற்றுக் கொள்வோம்! மீட்பை அனுபவிப்போம்! பாவ மன்னிப்பை ருசிப்போம்! மனந்திருந்தி வாழுவோம். இயேசு நம்மோடிருக்கிறார். தோத்திரம்.

ஆதி முதல் மீட்பு உண்டு பண்ணப்படுவது குறித்து தீர்க்க தரிசனம் உரைத்த கடவுளே! தோத்திரம். மீட்பை அனுபவிக்க அதில் நிலை நிற்க அருள் தாரும். இயேசு மீட்பர் வழியே ஆமேன்.