மத்தேயு 8 : 1-4                                          05 நவம்பர் 2021, வெள்ளி

“திரும்பவும் அவர் ஜெபாலயத்துக்குப் போனார்.” – மாற்கு 3 : 1

இந்தியா முழுவதும் சர்ச்சுகளைக் கட்டுகிறார்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அல்ல! இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத்தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள். நாம் கற்களைக் கொடுக்கிறோம். இப்படிச் சொன்னது யார் தெரியுமா? சுவாமி விவேகானந்தர்.

இயேசு உபதேசமும் கொடுத்தார், உணவும் கொடுத்தார். உபதேசம் கொடுப்பதில், ஆலயம் கட்டுவதில், மதப்பிரச்சாரம் செய்வதில் கிறிஸ்தவம் காட்டுகிற தீவிரம் தவறல்ல! ஆனால் சேவை தேவைப்படுகிற இடங்களில், பிரசங்கத்தால் மட்டும் என்ன பயன்? சமகாலச் சூழலில் கிறிஸ்தவரின் சேவை மனம் தேய்ந்து கொண்டே போகிறது. பிரசங்கம் செய்வது மட்டுமே எனது கடமை என்று பலரும் நினைக்கிறோம். நாம் பேசுகிறதை நாம் செய்யத் தயங்கினால் நமது வார்த்தைகளுக்கு என்ன மரியாதையிருக்கும். கடவுள் உங்களை நேசிக்கிறார் என்று சொல்லுகிற நாம் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்துச் சிரிக்கத் தயங்கினால் கடவுளின் அன்பை ருசிக்கும் நம்மால் பிறருக்கு என்ன பயன்?

இயேசு திரும்பவும் ஜெபாலயத்திற்குப் போனார். முதலில் ஜெபாலயத்திற்குச் சென்ற போது நீங்கள் ஓய்வு நாளை அசட்டை பண்ணினீர்கள் என்று குற்றம் சாட்டினர். ஓய்வு நாள் பற்றி இயேசு உபதேசம் பண்ணினார். திரும்பவும் ஜெபாலயத்துக்குச் சென்றார். அங்கே ஊனமுற்றவர் ஒருவர் இருந்தார். அவரைக் குணமாக்கினார். ஓய்வு நாளில் நன்மை செய்வது நியாயம் என்று விளக்கினார் இயேசு.

அந்த நாட்களில் இயேசுவின் பணிக்குக் காலநேரம் இருக்கவில்லை என்று மார்க்கு எழுதி வைத்தார். நன்மை செய்யவும் இடம் காலம் இல்லை. இது இயேசு நமக்கு வைத்த முன்மாதிரி. வெறும் வார்த்தைகளால் பிறரை ஏமாற்றாதிருப்போம். கடவுளின் கிருபையை, அன்பை, மன்னிப்பை, இரட்சிப்பை நமது வார்த்தைகள் வழியாக மட்டுமன்றி, செயல்கள் வழியாகவும் பிரதிபலிப்போம். பகிர்ந்தளிப்போம்.

அன்பின் நிறைவாம் கடவுளே! உமது இரக்கத்தால் நாங்கள் அன்பின் மேல் அன்பு பெற்றோம். நாங்கள் உமது அன்பைப் பெற்றுள்ளவர்கள் என்பதை வார்த்தையினால் மட்டுமல்ல, செயலில் நிரூபிக்க உமது ஆவியின் துணை தாரும். இயேசு வழியே ஆமேன்.