மாற்கு 10 : 17-22                            18 மார்ச் 2022, வெள்ளி

“நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்…” – மாற்கு 10 : 17

உலகில் எல்லா சமயங்களும் மரணத்திற்குப் பின்பு ஒரு வாழ்வு உண்டு. அந்த வாழ்வு கடவுளோடு வாழ்கின்ற வாழ்வு என்பதை கூறுகின்றன. இதனால் அழியாத கடவுளோடிருக்கின்ற வாழ்வை அடைய வேண்டும் என்று மனிதர் வாஞ்சிக்கின்றனர். அதற்கான வழிகளையும் தேடி அலைகின்றனர்.

நாம் வாசித்த திருமறைப்பகுதியில் ஒருவர் இயேசுவிடம் வந்தார். முழங்கால்படியிட்டார். இயேசுவினிடம், நல்ல போதகரே நித்திய வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். இவர் இயேசுவினிடம் சரணாகதி அடைவதைப் பார்க்கிறோம்.

இயேசு அவரிடம், கடவுள் ஒருவரே நல்லவர், ஆனால் நீ என்னை நல்லவர் என்று சொல்லுகிறாயே என்றார். அத்துடன் மோசேயின் வழியாக எழுதிக் கொடுத்த கற்பனைகளை பட்டியலிட்டார். இவற்றை நீ கைக்கொள் என்றார்.

அந்த வாலிபன் இயேசுவினிடம்: போதகரே இந்த கட்டளைகளை நான் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். செல்வந்தனான வாலிபனின் பதிலை இயேசு ஏற்றுக் கொண்டார். இதனால் அந்த வாலிபன் கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்ந்தது உறுதியாகிறது. இயேசுவும் அவன் வாழ்ந்ததை ஒப்புக் கொள்ளுகிறார்.

இயேசு இந்த செல்வந்தனை அன்பாக உற்று நோக்கினார். அவன் தீமை செய்யவில்லை, ஆனால் என்ன நன்மை செய்தார் என்பதை சுட்டிக்காட்ட விரும்பினார். இரண்டு காரியங்களை அவனுக்கு உணர்த்தினார். ஒன்று உன் செல்வத்தை விற்று ஏழைகளுக்குக் கொடு. இரண்டாவது என்னை பின்பற்றிவா என்றார். இந்த இரண்டையும் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்க முடியாது, பிரிக்கவும் இயலாது.

இயேசுவின் இந்த வார்த்தைகளைக் கேட்ட செல்வந்தன் இயேசுவை விட்டுச் சென்று விட்டான். இயேசுவின் பின் செல்ல வேண்டுமானால், ஏழைகளிடம் அன்பு செலுத்த வேண்டும். ஏழைகளிடம் அன்பு செலுத்த இயேசுவின் பின் செல்ல வேண்டும். இதில் ஒன்று இல்லாமல் மற்றது இல்லை. கடவுள் நமக்குத் தந்திருக்கின்ற பொருட் செல்வத்தைக் கொண்டு கடவுளின் அளுளைப் பெறுவதே ஞானம்.

நம் வாழ்வு நிறைவு பெறும்போது கடவுளோடுள்ள அழியாத நிலையான வாழ்வைப் பெற வேண்டும். இந்த வாழ்வை மனுக்குலம் பெறும்படி தான் இயேசு நம்மைப் போல ஆனார். அவர் மரித்து உயிர்த்தெழுந்தார். இது நம் உயிர்த்தெழுதலை உறுதி செய்கிறது.

இந்த அழியாத வாழ்வு இயேசுவின் பாடு மரணத்தின் வழி நமக்கு உறுதியாகிறது. இயேசுவில் வைக்கிற விசுவாசமே நித்திய வாழ்வை பெற வழி, சிலுவை மரணத்தை தியானிப்போம். அதன் வழி நித்திய வாழ்வை பெறுவோம்.

அன்பு தகப்பனே! இயேசு வாழ்ந்து காண்பித்த வழியில் நாங்களும் வாழ்ந்து அழியா வாழ்வைப் பெற கிருபை செய்யும்! இயேசுவில் பிதாவே ஆமேன்.