ஏசாயா 52 : 10-15                              27 ஏப்ரல் 2021, செவ்வாய்

“அநேகர் உம்மைக் கண்டு பிரமித்தார்கள்… மனித உரு குலைந்தது, மானிட சாயல் அழிந்தது.” – ஏசாயா 52 : 14

ஒரு மரம் மழையில் விழுந்துவிட்டது. இந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது. மரத்தின் வேரையும் தோண்டி எடுத்து எறிந்துவிட்டனர். அடுத்த கார்த்திகை மாதத்தின் அடை மழையில் இந்த மரம் தோண்டி எடுக்கப்பட்ட அதே இடத்தில் அதே மரத்தின் துளிர் தோன்றியது.

இயேசு என்று புதிய ஏற்பாட்டில் அறியப்பட்டவர். பழைய ஏற்பாட்டில் ‘தாசன்’ என்று அறிமுகமானார். அக்கிரமக்காரரில் ஒருவராக நினைக்கப்பட்டார் தாசன். அனேகருடைய பாவத்தை இவர் சுமந்ததால் தாசன் என்று பெயர் பெற்றார். இவர் தம்மைத் தாமே ‘மரணத்தில் ஊற்றினார்’. இவருடைய மானிட சாயல் அழிந்தது. இவருடைய தழும்புகளால் பலர் குணமாக்கப்பட்டனர்.

அழகில்லாத இயேசு, அவலட்சணமான இயேசு மீட்பின் ஆதாரமானார். மானிட உரு குலைந்தது. மீட்பின் அருள் முளைத்தது. இயேசுவின் பாடு, மரணத்தை ஏசாயா தீர்க்கனின் 53ஆம் அத்தியாயம், மிக விரிவாக, விளக்கமாக, சரியாக வர்ணிக்கின்றது. எனக்காக, உனக்காக, நமக்காக இயேசு வேதனைப்பட்டார், உருக்குலைந்தார், அழிந்தார். என்றாலும் உயிர்த்து எழுந்தார்! அழிந்தவர் வாழ்ந்திருக்கிறார். நம்மை வாழ்விக்கிறார். அழகற்ற இயேசு, சாவு என்ற ஆற்றில் மூழ்கி எழுந்து ‘அழகர்’ ஆனார். விலைமிகுந்த இந்த இலவச மீட்பை வீணாக்காதிருப்போம். இலவசமாக நீதிபரராக்கப்பட்டிருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டே பாவக்குட்டையில் வீழ்ந்து நம்மை அழுக்காக்கிக் கொள்ள வேண்டாம். மீட்கப்பட்ட மக்கள் நாம் என்பது பிறருக்கு வெளிப்படையாகத் தெரியும்படி; வித்தியாசமாக, குற்றம் சாட்டப்படாமல் வாழுவோம். அவர் பரிசுத்தர்! நாமும் பரிசுத்தரே.

உமது திருமகனின் உருகுலைந்திட எமது மீட்புக்கென தியாகம் செய்தவரே! உமது தியாகம் வீணாகி விடாமலிருக்க எம்மை தூய்மை வாழ்வில் நிலை நிறுத்தியருளும். இயேசு வழியே ஆமேன்.