மத்தேயு 26 : 69-74                         28 ஜனவரி 2026, புதன்

“நீ என்னை அறியவில்லையென்று மூன்று தரம் மறுதலிப்பாய்.” – லூக்கா 22 : 34

ஒரு போதகரின் மகன், இளைஞன். பைக்கில் நீண்ட பயணங்கள் செல்லுவது அவனுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. ஆயிரம் கிலோ மீட்டர் செல்லுகிற ஒரு பயணத்தை அவன் திட்டமிட்டான். அப்பா எச்சரித்தார். மிக நீண்ட பயணம், ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தனியே செல்வதும் நல்லதல்ல என்று சொன்னார். அவன் கேட்கவில்லை. பைக் ஒட்டுவதில் நான் கில்லாடி. நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டான். பாதி வழியில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் மாட்டி மருத்துவமனையில் யாரென்று அடையாளம் காணப்பட முடியாமல் கிடந்தான். மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அப்பாவுக்கு செய்தி தெரிந்தது. லட்சக்கணக்கில் செலவு செய்து மகனை மீட்டெடுத்தார். மனிதர்கள் திறமைக்குறைவுள்ளவர்கள், பலவீனமானவர்கள். ஆனால் தன்னால் எல்லாம் முடியும் என்று அதீதமாக நம்புகிறவர்கள்.

இன்றைய தியான வசனத்தின் சூழலை பாருங்கள். எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட இஸ்ரவேலர் அந்த விடுதலையை கொண்டாடுகிற பஸ்கா பண்டிகை. இயேசு இந்த பண்டிகையின் விருந்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை கொடுக்கிறார். அங்கு பரிமாறப்பட்ட அப்பமும் திராட்சை ரசமும் இயேசுவின் புதிய உடன்படிக்கைக்கு அடையாளமானது. சீடர்களோடு பந்தியிருக்கும் இயேசு சீடர்கள் சாதாரண மனிதர்கள்தான் என்பதையும் அவர்களது பலவீனங்களையும் சுட்டிக்காட்டுகிறார். இவை இயேசுவின் சீடர்களின் விசுவாசத்தை சோதிக்கும் நிகழ்வுகள். வரும் சில நாட்களில் நடக்கப் போகிற ஆன்மீகப் போரின் துவக்கம் இது. இந்த வசனம் ஒவ்வொரு கிறிஸ்தவனும் நன்கு அறிந்த ஒன்றாகும்.

நமக்கு எப்போதுமே நம்முடைய திறமைகளின் மீது அசாத்திய நம்பிக்கை இருக்கும். மனிதர்கள் சாதாரணமானவர்கள். கடவுளின் கரம் கோர்த்தால் மட்டுமே வாழ்க்கையை வெற்றிகொள்ள முடியும் என்பது அடிக்கடி நமக்கு மறந்து போகும். என்னால் இது முடியும். நான் இதைச் செய்வேன். எனக்கு இது தெரியும். இப்படி எத்தனையோ விஷயங்களை நாம் பட்டியலிடுவோம்.

இதில் நான் என்கிற நீங்களும் நானும் கடவுளின் பிள்ளைகள். ஆனால் மனிதர்களின் திறமைகள் குறைவுள்ளவை. அவை கடவுளின் உறவில் நிலைத்திருக்கும் போதுதான் நிறைவடைகிறது அல்லது பூரணப்படுகிறது. நாம் சுயத்தை நம்பி வாழ்க்கையில் தோற்று இருக்கிறோமா? கடவுளை தேடுவோம். நமது திறமை தோற்றுவிட்டதற்காக வருந்துகிறோம். அப்படியானால் கடவுளை விட்டு விலகி இருக்கிறோம் என்று பொருள். ஏன் இந்த தோல்வி என்று கேள்விகளோடு இருக்கிறோமா? நாம் மட்டும் போராடி இருக்கிறோம் என்று அர்த்தம். நமக்காக காத்திருந்த கடவுளை ஏன் நாம் துணைக்கு அழைக்கவில்லை?

இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு நமக்காகத்தான் வந்தார். நம்மை பாவங்களில் இருந்து மீட்டெடுத்து கடவுளின் பிள்ளைகளாக மாற்றுவதற்காகவே சிலுவை மரணத்தை மேற்கொண்டார். அவரது உயிர்ப்பில் நம்முடைய வெற்றியும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அவரோடு இணைந்து இருப்போம். நம்முடைய பலவீனங்களை பலமாக மாற்றும் அவரில் நிலைத்திருப்போம்.

எல்லா காலங்களிலும் எங்களுக்கு அரணானவரே! இந்த உலகத்தின் வாழ்க்கையில் நாங்கள் தடுமாறி போகிறோம், உம்மை மறந்து போகிறோம், தோல்விகளை சந்திக்கிறோம். எங்களை மன்னியும். உமது கிருபையால் எங்களை பலப்படுத்தும். இயேசுவின் வழியே பிதாவே, ஆமேன்.