1 யோவான் 2 : 22-25                            05 நவம்பர் 2025, புதன்

“பிதா நமக்கு பாராட்டின அன்பு எவ்வளவு மேன்மையானதென்று பாருங்கள்.” – 1 யோவான் 3 : 1

கடவுள் நம்மீது பாராட்டிய அன்பை குறித்து கேள்விபட்டிருக்கிறோம். இந்திய தேசத்திலே நம்முடைய முன்னோர்களின் வாழ்வு எப்படி இருந்தது என அறிவோம். கல்வியானது கிடைக்கவில்லை, உரிமைகள் மறுக்கப்பட்டன, அடிமை வாழ்வு வாழ்ந்தார்கள்.

பாவிகள் என்று அழைக்கப்பட்ட நாம் இன்று கடவுளின் பிள்ளைகள் என அழைக்கப்படும் நிலைக்கு கடவுள் உயர்த்தினார்.

ஊழியர்களின் வருகையினால் கடவுளிடமிருந்து அன்பை, வரங்களை பெற்று இருக்கிறோம். அன்பு மிகுதியால் திறமைகளை நமக்கு தந்து உயர்த்துகிறார். ஆனால் நாம் திறமைகளை பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோம்.

இன்று நாம் பெற்று இருக்கிற வாழ்வு கிறிஸ்துவின் அஸ்திபாரம் என்பதனை மறந்துவிட வேண்டாம். சிலுவையில் இயேசுவானவர் மரித்து, இன்றுள்ள மகிமையான வாழ்வை நமக்கு தந்து இருக்கிறார்.

பிதாவின் அன்பை பெற்றுள்ள நாம் பிறருக்கு இந்த அன்பை கொடுக்க வேண்டும்.

அன்பு குறைந்துவிட்டதால் வீடுகளில் பிரச்சனை, கணவன், மனைவி இருவருக்குள் சண்டைகள், பிரிவினைகள், பெற்றோர் குழந்தைகளின் அன்பு மறைந்து விடுகிறது.

திருச்சபைகளில் இந்த அன்பு குறைவினால் பிரிவினைகள். இதனால் கிறிஸ்தவத்தின் மகிமை குறைந்துள்ளது. பிறர் ஏளனமாக பார்க்கும் நிலையில் உள்ளோம்.

1 கொரிந்தியரில் பவுல் அன்புக்கு 13-ம் அதிகாரத்தை எழுதி தந்துள்ளார். அன்பு எவைகளையெல்லாம் செய்யும், எவைகளையெல்லாம் செய்யாது என விளக்குகிறார். கடவுளின் அன்பு மாறாதது. மனிதனின் அன்பு மாறக்கூடியது.

கிறிஸ்து நம்மீது வைத்துள்ள அன்பை தினமும் நினைவு கூருவோம். அன்புள்ள தகப்பன் அப்பத்திற்கு பதில் பிள்ளைகளுக்கு பாம்பை கொடுப்பதில்லை.

கடவுள் நம்மீது கொண்ட அளவுக்கதிகமான அன்பினால் வாழ்கிறோம். நாம் பிழைத்து இருப்பது கர்த்தரின் கிருபையே என்பதனை உணர்வோம். கடவுளிடம் அன்பை பெற்று வாழ்கிற நாம் பிறருக்கு அந்த அன்பை காட்டாமல் இருப்பது எவ்வளவு தவறு என்பதனை உணர்வோம்.

அன்பின் கடவுளே! நீர் எங்கள் மீது வைத்த அன்பினை உலகத்திற்கு காண்பிக்க உம் சொந்த குமாரனாகிய இயேசுவை சிலுவையில் அறைய கொடுத்தீர். அந்த அன்பை உணர்ந்து உமது பிள்ளைகளாய் வாழ அருள் தாரும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.