யோவான் 19 : 13-16 28 மார்ச், 2020-சனி
“அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்புக் கொடுத்தான்.” – யோவான் 19 : 16
ஒரு குடும்பம் தங்கள் பாரம்பரிய சொத்துகளைப் பாதுகாக்க சுமார் 16 வருடங்களாக வழக்கு நடத்தி வந்தனர். தங்கள் பணத்தை இழந்து வாழ்வை நீதிமன்றத்திலேயே கழித்து வந்தனர். அப்படியும் அவர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காததால் பாதி சொத்துக்களையே பெற முடிந்தது. இன்று இலட்சக்கணக்கானவர்கள் நல்ல தீர்ப்புக்காக நீதி மன்றத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
பிலாத்து என்கிற பலஸ்தீனா ஆளுநர் இயேசுவை சிலுவையில் அறையும் படிக்கு ஒப்புக்கொடுத்தார். இயேசுவிடம் ஒரு குற்றமும் காணேன் என்று கூறியவர் பிலாத்து. உங்கள் அரசனையா நான் சிலுவையில் அறைய வேண்டும் என்று மக்களிடம் கேட்டவர் பிலாத்து . இயேசுவைத் தண்டித்து விடுதலை ஆக்குவேன் என்று தீர்மானித்தவன் நீதி நியாயத்திற்கு எதிராகத் தீர்ப்பளித்தார்.
ஏனெனில் பதவியும், பணமும், ஆடம்பரமும், உல்லாசமும் உண்மையைச் சார்ந்து நிற்பதில்லை. சுயநலம் எப்போதும் நீதியை விரட்டி அடித்துவிடும். இந்நிலையில் நியாயமான தீர்ப்புகள் எப்படிக் கிடைக்கும்? நீதி சந்தையில் விற்கப்படும் அல்லது வாங்கப்படும் செயலாக மாறி வரும்பொழுது கடவுளின் நீதிக்கு பூமியில் இடமேது? முதலாவது கடவுளையும் அரசையும் நீதியையும் தேடுவோம். மற்றவை யாவும் எல்லாம் நமக்குக் கூடக் கொடுக்கப்படும் என்று இயேசு கூறியிருக்கிறார். நாம் அவருடைய தீர்ப்புக்குக் காத்திருப்போம். அவருக்கு உண்மையான சாட்சிகளாய் வாழ்வோம். நம் குற்றங்களை தம்மீது ஏற்றவர் அவர். நமது நியாயமான வேண்டுதல்களையும் ஏக்கங்களையும் ஏற்று சாதகமான தீர்ப்பைத் தருவார். நியாயத் தீர்ப்பு நாளில் நாம் மகிழ்ந்திட கடவுள் நம்மை நடத்துவார்.
உலகத்தை ஆளுகிற கடவுளே! கடைசி நாளில் உம் நேசகுமாரன் எங்களை நியாயம் விசாரிக்கும் போது குற்றமற்றவர்களாக காணப்பட்டு நித்திய வாழ்வில் பிரவேசிக்க அருள் செய்வீராக! இயேசுவின் நாமத்தில் ஆமேன்.
