2 இராஜாக்கள் 8 : 25-29 25 ஜூலை, 2020 சனி
“அத்தாலியாள் என்னும் தெயவபயமற்ற ஸ்திரீயின் மக்கள்….” – 2 நாளாகமம் 24 : 7
தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை என்பது பழமொழி. பெற்றோர்களிடம் காணப்படும் குணங்கள் அப்படியே பிள்ளைகளிடம் வெளிப்படும். நாம் நமது குணங்களினால் பாராட்டப்படுகிறோம். அல்லது இகழப்படுகின்றோம். நல்ல பண்புகளை காட்டும் போது பாராட்டு கிடைக்கிறது. தீய பண்புகளை வெளிப்படுத்தும் போது அவப்பெயர் பெறுகின்றோம்.
தன் பெற்றோர்களின் தீயகுணங்களை, வெளிப்படுத்திய அத்தாலியாள் பற்றி இன்றைக்குக் காண்போம். இஸ்ரவேலன் அரசனாகிய ஆகாப், யேசவேல் என்பவர்களின் மகள் அத்தாலியாள். யூதா அரசனாகிய யோராம் இவளை விவாகம் செய்தான். இவளுடைய தாயாகிய யேசபேலிலிருந்த தீய குணங்கள் இவளிலும் காணப்பட்டது.
யோராம் மரித்தபோது அவனுடைய மகன் அகசியா அரசனானான். ஒரு வருடத்தில் யெகூ அகசியாவைக் கொன்றான். அப்பொழுது அத்தாலியாள் இராஜவம்சத்தாராகிய தன் பேரப்பிள்ளைகளைக் கொன்று விட்டு, தானே ஆட்சியை எடுத்துக் கொண்டாள். யோராமின் குமாரர் கொல்லப்பட்டபோது அவனுடைய இளையமகனாகிய யோவாசை, யோராமின் சகோதரியாகிய யோசேபியாத் தப்பவைத்தாள். யோவாஸ் ஆறு வருஷமாகக் கடவுளின் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தான்.
அத்தாலியாள் பாகால் வழிபாடு உச்சநிலை அடைய காரணமாக விளங்கினாள். அவளது வெட்கம்கெட்ட தாயைப் போல் மிகுந்த செல்வாக்கு செலுத்தினாள். இரத்த வெறியோடு 6 ஆண்டுகள் ஆண்டாள். பாகாலின் பெயரால் ஆலயத்தை வியாபாரக் கூடமாக்கினாள். யோவாஸ் தன் அரசிக்கு எதிராக கலகம் செய்தார். பின்பு ஆலயத்திலிருந்தவர்கள் முன் யூதாவின் அரசனாக யோவாசு முடி சூட்டி கொண்டார். இதை அறிந்த அரசியாகிய அத்தாலியா அதை அடக்க முயன்றாள். போர் வீரர்கள் முன் தான் ஒன்றும் செய்ய இயலாமையை அறிந்து தப்பியோட முயன்றபோது கொல்லப்பட்டாள். இதனால் எருசலேமில் பாகால் வழிபாடு முடிவுக்கு வந்தது.
பிறக்கும்போதே யாரும் கெட்டவர்களாகப் பிறப்பதில்லை. சூழலும் வளர்ப்பு முறையுமே மனிதர்களை உருவாக்குகிறது. சந்தர்ப்ப சூழலால் தவறான குணங்களோடு சிலர் உருவாகிவிடும்போது நாம் அவர்களை விட்டு விலகியிருப்பதே நல்லது. அவர்களையும் ஆண்டவர் இயேசு நேசிக்கிறார். அவர்கள் மனந்திரும்பக் காத்திருக்கிறார். அவர்களுக்கும் இயேசுவின் அன்பைச் சொல்லுவது நம் கடமையே. ஆனால் இந்த முயற்சியில் நாமும் அவர்களுடைய வழிக்குச் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ளுவது சிறப்பு. கடவுள் பயத்தோடு திருமறை கற்பிக்கும் குணங்களை கைக்கொண்டு வாழ்வோம்.
கடவுளே, தூய்மையான குணத்தை வெளிப்படுத்தி, தீய குணங்களை விட்டு வாழ எங்களுக்கு பெலன் தாரும். கடவுளின் நாமம் மகிமைப்படுத்தும்படி வாழ வழி நடத்தும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
