லூக்கா 8 : 43-48 20 நவம்பர் 2021, சனி
“பயந்து நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள்.” – மாற்கு 5 : 33
நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம் அது. என் தந்தையார் போர்டிங் மாஸ்டராகவும் ஆசிரியராகவும் வேலை செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் போர்டிங் மாணவன் ஒருவனை நான் அடிஅடி என்று அடித்து வதைத்துவிட்டேன். நான் முரடன். ஆனால் யாருடனும் அவசியமில்லாமல் சண்டைக்குப் போகமாட்டேன். இது என் தந்தைக்குத் தெரியும். தந்தைக்கு இந்தக் கை கலப்பு விஷயம் தெரிந்திருக்கிறது. அன்று இருட்டும் நேரத்திற்கு வீட்டிற்குப் போனேன். தந்தை வீட்டின் வெளியே பிரம்புடன் நின்று கொண்டிருந்தார். ‘டேய் இங்கே வா’ என்று அவர் கோபமுடன் உறுமிய குரலிலேயே கதிகலங்கிப் போனேன். மடமடவென்று உண்மையைச் சொன்னேன். அந்தப் பையன் என் தந்தையைக் கேவலமாகப் பேசினது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த வேறு சில மாணவர்கள் எல்லாவற்றையும் என் தந்தையிடம் மறைக்காமல் சொன்னேன். உறுமலும் கோபமும் உண்மையை வரவழைக்கும் வழிகளோ!
என் வஸ்திரங்களைத் தொட்டுக் குணமடைந்தது யார்? என்று அதட்டிக் கேட்டவர் இயேசு. இயேசுவின் உடையைத் தொட்டவர் ஒரு பெண். இயேசுவின் முகத்தைக் கூடப் பார்க்க முடியாத கூட்டம். ஆனால் அவருடைய துணியைத் தொட்டாலும் குணம் கிடைக்கும் என்று நம்பினவர் இந்தப் பெண். நம்பினார், தொட்டார், சுகம் பெற்றார். இப்பொழுது இயேசு கேட்டார்! யார் அது? அந்தப் பெண் அச்சமடைந்தார். நடுங்கினபடி முன்னே வந்தார், இயேசுவின் பாதத்தில் விழுந்தார், உண்மை உரைத்தார்.
யார் முகத்தைப் பார்க்க முடியாது என்று நினைத்தாரோ அவர் முகத்தைப் பார்த்தார். யாருடைய குரலைக் கேட்க முடியாது என்று நினைத்தாரோ அந்தக் குரலைக் கேட்டார். மறைந்து நின்று தொட்டவர், மடமடவென உண்மையை உரைத்தார். அப் பெண் அதிக ஆசீர்வாதம் பெறுவதற்கு இயேசுவின் அதட்டல் பயன்பட்டது. அப் பெண், தனது ‘குணமாவேன் என்ற இரகசிய நம்பிக்கையை’ வெளிப்படையான விசுவாச அறிக்கைச் செய்தியாக்கிட இயேசுவின் அதட்டல் பயன்பட்டது. இயேசு நம்மையும் அதட்டுவாராக! நாமும் உண்மை பேசுவோமாக! நமது விசுவாச அறிக்கை வெளிப்பட இயேசு நம்மை அதட்டுவாராக.
அன்பு இறைவா! உமது அதட்டுதலும் கோபமும் எங்கள் விசுவாசத்தின் வளர்ச்சியாகிறது. நாங்கள் உண்மை உரைக்கவும் உம்மைத் துதிக்கவும் உம்மை அறிக்கையிடவும் எம்மை அதட்டும். நாதர் இயேசு வழியே ஆமேன்.