ஏசாயா 10 : 27-34 23 அக்டோபர், 2017 திங்கள்
“நானே அதற்கு சுற்றிலும் அக்கினி மதிலாயிருப்பேன்.” – சகரியா 2 : 5
இஸ்ரவேலர்கள் சர்வ வல்ல கடவுளின் மக்கள். கடவுளின் ஜனம் பாவத்தினாலும், அக்கிரமத்தினாலும் அந்நிய அரசனால் சிறைபட்டனர். 70 வருடங்கள் பாபிலோன் சிறையிருப்பில் இருந்தனர். பின்பு ஆயிரக்கணக்கான யூதர்கள் எருசலேம் நகருக்குத் திரும்பினர். அதற்குப் பின்பு இந்தத் தீர்க்கதரிசனம் சகரியா தீர்க்கரால் கூறப்பட்டது. இதுவே நமது தியானப்பகுதி. சிறையிருப்பிலிருந்து திரும்பிய யூதர்கள் கண்ட காட்சி, எருசலேம் நகரம் உருக்குலைந்து கிடந்தது. நேபுகாத்நேச்சர் என்ற அரசனால் எருசலேம் நகரத்தின் சுவர்கள் பல வருடங்களுக்கு முன்னே இடிக்கப்பட்டிருந்தது. ஆலயம் முழுவதும் அழிக்கப்பட்டிருந்தது. சிறை வாழ்வில் இருந்து திரும்பிய யூதர்கள் செருபாபேல் என்பவரின் தலைமையின் கீழ் இந்த ஆலயத்தை மறுபடியும் கட்டும் பணியில் இறங்கினர். பல தடைகள் வந்தன. ஆனாலும் ஆலயத்தைக் கட்டும் பணியில் ஈடுபட்டனர். இந்த சூழ்நிலையில் கர்த்தர் அவர்களுக்கு அக்கினி மதிலாக இருந்தார். கடவுளின் தயவால் ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள்.
கடவுள் சத்துருக்களிடமிருந்தும், தீய சக்திகளிடமிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறார். உடைந்து போன, உருக்குலைந்து போன குடும்பங்கள், திருச்சபைகளை மீண்டும் கட்ட, புதுப்பிக்க கர்த்தர் அக்கினி மதிலாயிருந்து செயல்படுகிறார். அவருடைய சித்தத்திற்கு பூரணமாக நாம் இணங்கி வாழ்வதற்கே அவர் அக்கினி மதிலாக இருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களின் வனாந்தர வழிப் பயணத்தில் அக்கினி ஸ்தம்பம், மேகஸ்தம்பமாக கர்த்தர் பிரசன்னமாகி வழிநடத்திப் பாதுகாத்தார் என்பதை அறிவோம். கடவுள் இயேசு கிறிஸ்துவின் வழியாக நம்மைப் பாதுகாக்கிறார். இயேசு நமது மேகஸ்தம்பம். இயேசு கிருபையும் சத்தியமுமுள்ளவராக நம்மிடம் தங்கியிருக்கிறார். அக்கினியாகவும் மேகமாகவும் நம்மைச் சுற்றிலுமிருந்து பாதுகாத்து நடத்துகிறார். அந்த கடவுளின் பாதுகாப்பில் மறைந்து வாழ்வோம்.
ஆபத்து, துன்பம், அழிவு நேரங்களில் அரணாக, கோட்டையாக இருக்கும் கடவுளே! நாங்கள் எப்போதும் உமது பாதுகாப்பில் வாழ உதவும். எல்லா சத்துருக்களின் தீமைக்கும் எங்களை விலக்கி உமது செட்டைகளின் மறைவில் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளும். இயேசுவில் பிதாவே ஆமேன்.
