அப்போஸ்தலர் 6 : 8-12 06 நவம்பர் 2020, வெள்ளி
“மனுஷ குமாரன் கடவுளின் வலது பாரிசத்தில் நிற்கிறதையும் பார்க்கிறேன்.” – அப்போஸ்தலர் 7 : 56
ஸ்தேவான் என்ற பெயருக்கு மணிமுடி அல்லது மலர் வளையம் என்று பொருள். ஆரம்ப திருச்சபையில் விசுவாசிகளின் தொகை அதிகரித்தது. கூடவே பிரச்சனைகளும் தலை தூக்கின. குறிப்பாக கிரேக்க மொழி பேசும் விதவைகள் கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அப்போஸ்தலர் கவனத்திற்கு இது சென்றது. அவர்கள் நாங்கள் திருவசன ஊழியத்தில் நிலைத்திருக்கிறோம். எனவே நீங்கள் பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்த, நல்லவர்கள் என்று மதிப்புப் பெற்ற ஏழு பேரைத் தெரிந்தெடுங்கள். அவர்கள் இந்த பிரச்சனையை கவனிப்பார்கள் என்றனர். அப்போஸ்தலர் ஆலோசனைக்கிணங்கத் தெரிந்தெடுக்கப்பட்ட ஏழு பேரில் ஸ்தேவானும் ஒருவர். மூப்பர்கள் சிதறியிருந்த யூதர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள். அவர்கள் ஸ்தேவானோடு வாக்குவாதம் செய்தார்கள். ஆனாலும் ஸ்தேவானை எதிர்கொள்ள அவர்களால் முடியவில்லை. ஸ்தேவானின் அருளுரையும் மரணமும் மூன்று உண்மைகளை எடுத்துரைக்கின்றது. ஒன்று, திருச்சபையின் தலையாயப் பணி வசனத்தைப் பிரசங்கிப்பதாகும். இரண்டு, கிறிஸ்தவன் தன் விசுவாசத்திற்கு சாட்சி பகர வேண்டும். மூன்று, கிறிஸ்துவை நிராகரித்த இஸ்ரவேலரை கடவுள் நிராகரித்துவிட்டார்.
ஸ்தேவானின் மரணம் எருசலேமுக்கு அப்பாலும், யூதேயாவுக்கு வெளியில் சமாரியர்களுக்கும் பின்பு பிற இனமக்களுக்கும் நற்செய்தி பரவ காரணமாயிற்று. ஸ்தேவான் மரிக்கும் போது வானங்கள் திறந்திருப்பதையும் மனித குமாரன் கடவுளின் வலது பக்கம் நிற்கிற கண்கொள்ளா காட்சியைக் கண்டார். `இயேசு விண்ணுலகம் சென்றார். பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்’ என்று வாசிக்கிறோம். விசுவாசப் பிரமாணத்திலும் இதையே அறிக்கையிடுகிறோம். ஆனால் இங்கு ஸ்தேவான் நிற்கிறதை காண்கிறார். இயேசு மீட்பின் பணியை நிறைவு செய்து, விண்ணுலகம் சென்று, முடிந்தது என்ற நிலையில் உட்கார்ந்தார். இங்கு அவருடைய சரீரத்தின் ஓர் உறுப்பான ஸ்தேவான் கல்லெறியப்படுகிறார். நம் ஆண்டவர் துடிக்கிறவராக வேதனையோடு உட்கார முடியாமல் தவித்தவராக நிற்கிறார். அத்துடன் துடிதுடிக்க உயிர்விடும் விசுவாசியை எதிர் கொண்டு அழைக்க ஆயத்தமாயிருக்கிறார் என்பதை இந்நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
அன்பானவர்களே நமது வேதனைகளை அறிகிற ஓர் ஆண்டவர் நமக்கு இருக்கிறார். ஏற்ற காலத்தில் உதவி செய்வார் என்ற நிச்சயத்தோடு வாழுவோம்.
மனதுருக்கமுள்ள கடவுளே! உமது நேசகுமாரன் எங்களைப் போல பிறந்து நாங்கள் அனுபவிக்கிற யாவையும் அனுபவித்தார். அதனால் எங்களுக்கு உதவி செய்கிறார் என்ற நிச்சயத்தில் வாழ உதவி செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.