லூக்கா 22 : 7-13 22 மார்ச், 2020-ஞாயிறு
“பஸ்கா ஆட்டைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது.” – லூக்கா 22 : 7
பண்டிகைகளையும் விழாக்களையும் ஏற்படுத்தி கொண்டாடி மகிழ்வது உலக நாடுகளில் காணப்படுகிறது. இவ்விழாக்களிலே விருந்துகள் சிறப்பான இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இஸ்ரவேல் மக்களைப் பொறுத்தவரையில் அவர்களது உலகளாவிய விருந்தும் கொண்டாட்டமும் பஸ்கா பண்டிகையில் அமைந்திருந்தது. இது இஸ்ரவேலர்களின் விடுதலை நாள் கொண்டாட்டம் ஆகும்.
கடவுள் எகிப்து தேசத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேல் மக்களை விடுதலை பண்ணி, எகிப்து தேசத்தைவிட்டு இரவு வேளையில் கடந்து போகச் செய்தார். இதனால் இரவு வேளையில் அப்பங்களை ஆயத்தம் செய்து உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் காலையில் புளிப்போடு உண்ணப்பட வேண்டிய அப்பம், இரவிலே புளிப்பில்லாமல் உண்ணப்பட்டது. அத்துடன் ஒரு வயதுள்ள ஆட்டுக் குட்டியை அடித்து அதன் இரத்தத்தை வீட்டு நிலைக் கால்களில் பூச வேண்டும். அன்று இரவு அதன் இறைச்சியை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லாத அப்பங்களோடும், கசப்பான கீரையோடும் சாப்பிட வேண்டும். இந்த நாளே விடுதலை நாளாகவும், இந்த விருந்தே கடவுளின் கட்டளைப்படி வருடம் தோறும் பஸ்கா பண்டிகை மற்றும் விருந்தாகவும் நினைவு கூரப்பட்டது. இந்த பஸ்கா விருந்தில் தங்களது அடிமைத்தன வாழ்வை நினைக்கும் வகையில் உப்புத்தண்ணீர், கசப்பான கீரை, பழ பேஸ்ட் மற்றும் ஆட்டை பலியிட்டு உண்ணுதல் போன்றவை இடம் பெற்றன.
இயேசு கிறிஸ்துவும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தார். யூதாஸ் அவரைக்காட்டிக் கொடுத்த, அதாவது அவர் சிலுவையில் இறந்த நாளுக்கு முந்தினநாள் இரவு இயேசு திருவிருந்தை ஏற்படுத்தினார். இந்த விருந்தில் இயேசு அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் தம் உடலாகவும் தம் இரத்தமாகவும் கொடுத்தார். இயேசு அப்பத்திலும் அப்பத்தோடும் அப்பத்தைக் கொண்டும் தம் சரீரத்தையும், திரட்ச ரசத்திலும், ரசத்தோடும் ரசத்தைக்கொண்டும் தம் இரத்தையும் நமக்கு அளிக்கிறார்.
இந்த விருந்தில் பங்கு பெறுதல் நமது ஆன்மீக வாழ்விற்கு மிகப்பெரிய ஆசீர்வாதமாக இருக்கிறது. பாவ மன்னிப்பு கிடைப்பதும் இயேசுவின் பிரசன்னமாகுதலும் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாக்கியமாகும். இயேசுவின் அருளும் (கிருபை) நமக்கு வழங்கப்படுகிறது. நமது பஸ்கா பலியாகிய இயேசுகிறிஸ்து நமக்காக பலிவிருந்தாகியிருக்கிறார். பாவப்பரிகாரியாகிய இயேசுவில் பலியிலும் பலி விருந்திலும் பங்கடைவோம். பாவமன்னிப்பைப் பெற்று மகிழ்ச்சியோடு வாழுவோம்.
மன்னிக்கிற கடவுளே! நாங்கள் எப்போதும் பரமவிருந்தில் பங்குபெற்று உமது கிருபையைப் பெற்று வாழத் துணை செய்யும். இயேசுவின் நாமத்தில் ஆமேன்.