யோசுவா 24 : 1-13 13 மே 2025, செவ்வாய்
“நீங்கள் நடந்துவந்த வழிகளிலெல்லாம் உங்கள் கடவுளாகிய கர்த்தர் உங்களைச் சுமந்து கொண்டு வந்ததை நீங்கள் காணவில்லையோ?” – உபாகமம் 1 : 31
‘வரலாற்றை மறந்தவன் தன்னை மறந்தவன்’ என்பார்கள். வாழ்வில் உயர்வு வரும் போது கடந்த காலங்களை மறந்து விடுகிறவர்கள் உண்டு. இஸ்ரவேல் மக்களின் வாழ்வில் கடவுளின் வழிநடத்துதல் அற்புதமானது. அவர்களின் முற்பிதாவாகிய ஆபிரகாமை அழைத்த காலம் முதல் ஒவ்வொரு நிலையிலும் கர்த்தர் அவர்களோடு இருந்தார். இஸ்ரவேல் மக்களின் வனாந்திர பயணத்திலும் கடவுள் அவர்களோடு இருந்து அவர்களை வாக்களித்த தேசத்திலே கொண்டு சேர்த்தார்.
கடவுளின் பராமரிப்பை பெற்ற மக்கள் தமது வழிநடத்துதலை உணர்ந்து வாழும்படி அழைக்கிறார். கடவுளையும், அவருடைய வார்த்தைகளையும் நினைவில் வைத்து வாழ அழைக்கிறார்
அனேக மக்கள் தாங்கள் கடந்து வந்த பாதைகளை மறந்து விடுகிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் நமக்கு கடவுள் பரிசாகத் தந்த பெற்றோர் வாயிலாக, நமது குடும்பத்தினர் வாயிலாக, நண்பர்கள் வாயிலாக நாம் பெற்ற நன்மைகளை நினைவில் கொண்டு வாழ வேண்டும். நம்முடைய திருச்சபையின் அருளுரைகள் வழியாக நாம் பெற்ற நன்மைகளை நினைவில் வைத்திருப்போம். இந்த உலகத்தில் நமது வாழ்வில் கடவுள் தந்திருக்கிற நன்மைகளை நினைவில் கொள்ளுவோம். எண்ணிப் பார்ப்போம். கடவுள் நம் வாழ்வில் நடப்பித்த செயல்களை மறவாதிருப்போம். நம்மை மறவாத கடவுளை மறவாமல் வாழ்வோம்.
வரலாற்றில் செயலாற்றுகிற கடவுளே! நீர் எங்கள் வாழ்வில் தந்த அனைத்து ஆசீர்வாதங்களுக்காகவும் உமக்கு நன்றி. நாங்கள் எங்கள் வாழ்வில் பெற்ற நன்மைகளை மறவாமல் உம்மையே நம்பி வாழ எங்களுக்கு அருள்புரியும். இயேசுவில் பிதாவே. ஆமேன்.