Daily Devotional2019-03-25T10:30:46+00:00

Share This Story, Choose Your Platform!

ரோமர் 8 : 32-37                              04 ஜூன் 2025, புதன்

“உன் மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே?” – யோவான் 8 : 10

ஆதியிலிருந்தே மனிதன் தான் நற்பெயர் பெற்றவராய் இருக்க வேண்டும் என்பதற்காய் பிறர் மீது குற்றம் சாட்டுகிறவர்களாய் இருப்பதை காண்கிறோம். கடவுள் ஆதாமிடம் புசிக்க கூடாது என்று விலக்கின பழத்தை ஏன் உண்டாய் என்று கேட்டபோது நீர் எனக்கு தந்த பெண்ணானவள் எனக்குத் தந்தாள், நான் புசித்தேன் என்று குற்றம் சாட்டுகிறான். பெண்ணோ பாம்பு என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். ஒருவரும் தன் சுய தவறுகளை உணர்வதில்லை. தான் வாழ பிறரை குற்றம் சாட்டுகின்றனர்.

வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவை சோதிக்கும்படி அவர் மீது குற்றஞ்சாட்ட, விபச்சாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்மணியை அவரிடம் கல்லெறிந்து கொல்லும்படியாய் கொண்டு வந்தனர். ஆனால் அவளோடுகூட பாவம் செய்தவர்களில் ஒருவனையும் கொண்டுவரவில்லை. இயேசு, ‘உங்களில் பாவம் இல்லாதவர்கள் இவள் மீது முதலாவது கல்லெறியக்கடவன்’ என்றார். எல்லாரும் இருதயங்களில் குத்தப்பட்டவர்களாய் கலைந்து சென்றார்கள். இயேசுவும் அவளை ஆக்கினைக்கு தீர்க்கவில்லை. இனி பாவம் செய்யாதே என்றார்.

ஆண்டவர் அநியாயமாய் ஒருவர் மீதும் குற்றம் சாட்டுகிறவர் அல்ல. நாமும் நம்முடைய வாழ்விலே அநியாயமாய் பிறரை குற்றம் சாட்டாதிருப்போம். நாம் அளக்கின்ற அளவின்படியே நமக்கும் அளக்கப்படும். நாம் பிறர் குற்றங்களை மன்னிக்கும்போதுதான் நம்முடைய குற்றங்களும் மன்னிக்கப்படும். முதலாவது நாம் நமது கண்ணில் இருக்கிற உத்திரத்தை பார்க்க வேண்டும் அதைத் தொடர்ந்து பிறர் கண்ணில் இருக்கிற துரும்பை பார்க்கலாம். நாம் வாழ்கின்ற வாழ்விலே அநியாயமாய் பிறரை குற்றப் படுத்தாமலும் பிறருடைய மனங்களை காயப்படுத்தாமலும் இருப்போம். புழிக்குப் பழி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் ஒருபோதும் நமக்குள் இருக்க வேண்டாம். இயேசு பாவியான பெண்ணை மன்னித்தார். நாமும் பிறர் குற்றங்களை மன்னிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

கடவுளே! இயேசுவில் எங்கள் பாவங்களை மன்னித்து புது வாழ்வு அருளியிருக்கிறீர் நன்றி. மன்னிப்பை பெற்ற நாங்கள் அதை பகிர்ந்தளிக்க கிருபை செய்யும். இயேசுவில் பிதாவே, ஆமேன்.

Share This Story, Choose Your Platform!

Go to Top