1 கொரிந்தியர் 4 : 1-4 05 பிப்ரவரி 2025, புதன்
“நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடம் லாபத்தைத் தேடியடைந்ததுண்டா?” – 2 கொரிந்தியர் 12 : 17
லாபத்தைக் கருத்தில்கொண்டே இன்று ஊழியங்கள் என்ற பெயரில் வியாபாரங்கள் நடைபெறுவது நாம் அறிந்ததே! பிற நம்பிக்கையுடைய மக்களும் ஊழியர்களை மத வியாபாரிகள் என்று அழைக்கின்றனர். சமூக வலைத்தளங்களில் சிலரை சாட்சிகளாகவும் காட்டுகின்றனர். நாம் வாசித்த வசனத்தில் பவுல் தனது ஊழியத்தையும் கொரிந்திய சபை மக்களோடு தனக்குள்ள உறவையும் கூறுகிறார். அவர் அச்சபைக்கு அனுப்பிய ஆட்கள் மூலமாக எந்த இலாபத்தையும் எதிர்பார்த்து உங்களிடம் அவர்களை அனுப்பவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறார்.
இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள் தலைமைப் பதவியும், பொறுப்பும், அதிகாரமும், வரும்போது பணிவுடனும், நேர்மையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும். நமக்கு இருக்கிற செல்வாக்கின் மூலம் எளிய மக்களின் நலனுக்காக உதவிபுரிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம். அவர்களை சுரண்டவோ அவர்களிடம் அநியாய லாபத்தை தேடவோ கூடாது. பிலிப்பியர் 2:5 “கிறிஸ்துவின் சிந்தையே உங்களில் இருக்க வேண்டும்” என்று சொல்லுகிறது.
பவுலின் கேள்வியை இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். நாம் நமது அதிகாரம் மற்றும் செல்வாக்கை மற்றவர்களுக்காக சேவை செய்ய பயன்படுத்த உறுதி எடுப்போம். அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி மற்றவர்களை நமக்கு சேவை செய்ய பணிக்காதிருப்போம். நாம் பணிவுடனும், நேர்மையுடனும் அவர்களை நடத்துவோம். அதுவே இறைவழி.
பவுலின் முன்மாதிரியை பின்பற்றி பணிவுடனும், நேர்மையுடனும் ஆண்டவருக்கு சேவை செய்ய முயற்சிப்போம். நம்முடைய சக்தியையும், செல்வாக்கையும் பயன்படுத்தி எளிய மக்களை இயேசுவுக்குள் கூட்டிச் சேர்ப்போம்.
நல்ல கடவுளே! உமக்கு நாங்கள் உண்மையுள்ளவர்களாக இருந்து, சுய இலாபத்தைத் தேடாமல், ஊழியஞ் செய்ய அருள் புரியும். இயேசுவில் பிதாவே! ஆமேன்.