1 பேதுரு 1 : 20 05 ஜூன் 2026, வெள்ளி
“இவன் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும்.” – லூக்கா 23 : 35
“அறிவர் மார்ட்டின் லுத்தர் கூறுகிறார், “சிலுவை கடவுளின் பள்ளி, அங்கு அவர் தனது ஆழ்ந்த ஞானத்தை கற்பிக்கிறார்.” ஒரு ஆசிரியர் மாணவனிடம் வகுப்பில் ஒழுக்கம் ஒருவரின் வாழ்கையை மாற்றும் என்று கற்பித்தார். அதனை மறக்காமல் வாழ்கையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். அவர் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். அவர் ஆசிரியர் திரு. ஐயாத்துரை சாலமன் அவர்கள். எனவே சிலுவை நமது பள்ளி என்றால் அவை கற்றுக் கொடுப்பது தியாகம் மற்றும் கடவுளின் அன்பு ஆகும்.
இன்றைய தியானப்பகுதியில் சிலுவையின் அருகில் நின்ற மக்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு நிகழ்வைக் கண்டார்கள்; ஆனால் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இன்று நம்முடைய வாழ்க்கையிலும் இதே நிலை இருக்கலாம். நாம் கிறிஸ்துவைப் பற்றி கேட்கிறோம், சிலுவையைப் பார்க்கிறோம்; ஆனால் அதன் ஆழமான அன்பை உணராமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?
அதிகாரிகள் இயேசுவை கேலி செய்தார்கள். அவர்கள் கூறிய வார்த்தைகள் இகழ்ச்சியாக இருந்தாலும், அதில் ஒரு உண்மை மறைந்திருந்தது – “அவன் பிறரை இரட்சித்தான்.” ஆம், இயேசு இரட்சகர்தான். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது வல்லமையைக் காட்டும் ஒரு இரட்சகர். கடவுள் கொடுத்தது தியாகத்தின் மூலம் இரட்சிப்பை அளிக்கும் கிறிஸ்து.
“தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும்“ என்ற சவால், மனித சிந்தனையின் வெளிப்பாடு. உலகம் சக்தி, அதிகாரம், அதிசயம் ஆகியவற்றை எதிர்பார்க்கிறது. ஆனால் கடவுள் அன்பையும் தியாகத்தையும் தேர்ந்தெடுக்கிறார். இயேசு சிலுவையிலிருந்து இறங்கவில்லை. ஏனெனில் அவர் தம்மை காப்பாற்றுவதற்காக அல்ல, மனிதகுலத்தை இரட்சிக்கத்தான் வந்தார். இது தோல்வி போல தோன்றிய தருணம். ஆனால் அதுதான் கடவுளின் வெற்றி. சிலுவை மனித கண்களுக்கு பலவீனம். ஆனால் கடவுளுடைய கண்களுக்கு அது வல்லமை. இயேசு அமைதியாக துன்பத்தைத் தாங்கியதில், அவர் அன்பின் ஆழம் வெளிப்பட்டது.
இன்று நாம் எந்த அணியில் நிற்கிறோம்? வெறும் பார்த்துக் கொண்டிருப்பவர்களா? நையாண்டி செய்பவர்களா? அல்லது அந்த சிலுவையின் அர்த்தத்தை உணர்ந்து, சிலுவை கூறும் உண்மைகளை பின்பற்றி இந்த உன்னத தெரிந்தெடுப்பில் நன்றி கூறி வாழ்பவர்களாக இருகின்றோமா? நமது பதில் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும்.
சிலுவையை நோக்கிப் பார்க்கும் ஒவ்வொரு முறையும், அது நமக்கு நினைவூட்ட வேண்டிய காரியம் – “இது எனக்காக என் பாவத்திற்காக நடந்தது.” அந்த உணர்வு நம்மை மாற்றும், தாழ்மையாக்கும், அன்பில் வளரச் செய்யும் இவ்வாறு வாழும்போது நாம் கடவுளின் உன்னத தெரிந்தெடுப்பாக இருப்போம்.
அன்பான இயேசுவே! சிலுவையின் அர்த்தத்தை ஆழமாக உணர உதவிடும். நான் வெறும் பார்வையாளராக இல்லாமல், உம்முடைய அன்பை அனுபவித்து உமது உண்மை சீடராக வாழ தூய ஆவியரால் வழிநடத்தும். அப்பா பிதாவே, நாங்கள் உமது உன்னத தெரிந்தெடுப்பின் பிள்ளைகளாக வாழ உதவி செய்தருளும். இயேசுவின் வழியே, ஆமேன்.
