saint-marks2018-01-20T06:58:08+00:00

2 கொரிந்தியர் 12 : 9-10                             10 மார்ச் 2025, திங்கள்

“முதலாவது ஆண்டவருக்கும், பின்பு கடவுளின் சித்தத்தினால் எங்களுக்கும் தங்களைக் கொடுத்தார்கள்.” – 2 கொரிந்தியர் 8 : 5

கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூரும் நாள்கள் இவை. பாவத்தினால் சோர்ந்து, வாழ்விழந்த உலகம் மீண்டும் இறைவனுக்கு ஏற்புடையதாக புது வாழ்வு பெறவே இறைவன் தன் திருமைந்தனாம் இயேசுவை இவ்வுலகிற்கு அனுப்பினார்.

உலகையும், பிற அனைத்தையும் வாயின் வார்த்தையைக் கொண்டே உருவாக்கியவர் சர்வ வல்லவர். உலக மீட்பையும் இவர் ஒரு வார்த்தையைக் கூறி நிறைவேற்றியிருக்கலாமே என்று கேட்பவரும் உண்டு. ‘மீட்பு’ என்ற ஒரு வார்த்தை மட்டுமல்ல! பாவத்தின் அகோரமும் அதன் தண்டனையான மனுக்குலத்தின் நித்திய மரணமும், இதைக் கண்டு பரிதபிக்கும் இறைவனின் கருணையுள்ளமும் மீட்பில் உள்ளடங்கியிருக்கின்றன. குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டியான இறைமகன் இயேசுவின் தியாகம், மீட்பின் வழிமுறை ஆயிற்று. இரட்சிப்பு அல்லது இரட்சிக்கப்பட்டேன் என்று நம்புவதில் அடங்கியுள்ள உண்மைகள் ஏராளம்.

மீட்பின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் பிறருக்கும் உதவி செய்கிறார்கள் என்ற தகவலைப் பவுல் ஆதார வார்த்தைகளில் விளக்கினார். எருசலேமில் பஞ்சம் உண்டானது. எந்தத் தொடர்பும், உறவும் இல்லாத மக்கேதொனியா பகுதியைச் சேர்ந்த விசுவாசிகள் இவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தார்கள். வறுமை இருந்த போதும் இவர்கள் வாரி வழங்கினார்கள். இதற்குக் காரணம், கிருபையால் மக்கெதோனியா விசுவாசிகள் பெற்ற இலவச மீட்புதான்.

மக்கெதொனியா சபையார், “ஆண்டவருக்குத் தங்களைக் கொடுத்தார்கள்” என்று பவுல் பாராட்டினார். காணிக்கை, நன்கொடை கொடுப்பதன் கிறிஸ்தவ விளக்கம் இதுதான். ஊழியருக்கு, அல்லது ஊழியத்திற்கு என்னும் உணர்வை விட, ‘ஆண்டவருக்கு நான் என்னைக் கொடுக்கிறேன்’ என்ற உணர்வும் நம்பிக்கையும் முக்கியம்.

புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங் என்பவர், “இன்று 40 வயதைக் கடந்துள்ள ஒவ்வொரு இந்தியனும், ஏதாவது ஒரு வழியில் கிறிஸ்தவ மிஷனெரிகளின் சேவையை ருசித்திருப்பார்கள் என்பதை மறுக்க முடியாது” என்கிறார். ஆம் மிஷனெரிகள் நமக்காகத் ‘தங்களைக் கொடுத்தவர்கள்’.
நீங்களும் ஒரு மிஷனெறிதான்! வான்மலர் செய்வதும் மிஷனெறி ஊழியம்தான்! வாருங்கள். ஒன்றிணைந்து ஊழியத்தில் வளருவோம். ஆண்டவருக்கு நன்றி சொல்லுவோம். எங்களை உங்களுக்குத் தருகிறோம். உங்களை ஆண்டவருக்குக் கொடுங்கள்.

இரக்கம் உள்ள ஆண்டவரே! இயேசு சம்பாதித்த மீட்பின் நற்செய்தியை எங்களுக்குக் கொண்டு வர ஆயிரமாயிரம் மிஷனெறிமாரை எங்களிடம் அனுப்பினீர். எங்களுக்காக உழைத்த மிஷனெறிமாருக்காக உம்மைப் போற்றுகிறோம். இயேசு வழியே ஆமேன்.

Go to Top