Christianmedia.in

கிருபை நிறைந்தவர்

2 செப்டெம்பர், 2010 வியாழன்

எரேமியா 31 : 19-20

“….. என்றென்றுமாகக் கோபம் கொண்டிரார்; கிருபை  செய்வதே அவருக்குப் பிரியம்.” -  மீகா 7 : 18
கி.மு. 732ம் ஆண்டு சிரியா நாட்டை வென்றது அசீரியா.  சிரியா நாட்டின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.  பத்து ஆண்டுகளுக்குப் பின்பு, இஸ்ரவேலின் வட நாட்டிற்கும் இதே முடிவு வந்தது.  இக்காலகட்டத்தில் தான் மீகா தீர்க்க தரிசனம் உரைத்தார்.  சிறையிருப்பில் இருந்த இஸ்ரவேலர்களில் சிலர் ‘இறைவன் எங்களைக் கைவிட்டு விட்டார், ஆண்டவர் எங்களை மறந்தார்’ என்று அபயக்குரல் எழுப்பினர்.  பலர் இறைவனை மறந்தனர்.  சிலர் பிற சமயங்களைத் தழுவினர்.
பாவத்தின் விளைவுகளை விளக்கி, மேசியாவின் வருகையில் உண்டாகும் மகிழ்ச்சியைச் சொன்னார் தீர்க்கதரிசி.  இஸ்ரவேல் விழுந்தாலும் எழுந்திருப்பான், இஸ்ரவேலர்களுக்கு விடுதலை உண்டு என்றார்   தீர்க்கதரிசி. ஜனங்கள் தீர்க்கரின் செய்தியைக் கேட்டனர்.  தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தினர்.  அப்போது தீர்க்கர் சொன்னது தான் தியான வசனம்.
சிலருடைய உள்ளக் குமுறல்களைக் கேட்டிருக்கின்றோம்.  எனக்கு ஏன் இந்தப் பாடுகள்? சோதனை? நோய்? வறுமை?  இவற்றுக்குப் பதில் தெரியாவிட்டாலும், இறைவன் துன்பத்திலும் நம் மீது அன்பு கூறுகிறார் என்பது மட்டும் நமக்குத் தெரியும்.  இறைவன் நமது பாவங்களை மன்னிக்கிறார்.  அவர் கிருபை நிறைந்தவர், இரக்கம் நிறைந்தவர்.  அவரது கோபம் ஒரு நிமிஷம்.  நமது பாவங்களை சமுத்திரத்தின் ஆழத்தில் எறிந்து விடுகிறார்.  இறைவன் அருளும் மன்னிப்பு மாட்சிமை பொருந்தியது.  நமது உண்மையான பாவ அறிக்கை எது?  மனிதன் செய்யும் குற்றங்கள் இறைவனுக்கு விரோதமானது என்று உணருவதும் திருந்தி வாழ்வதும் தான் உண்மையான பாவ அறிக்கை.
நாம் வாழ்வது இறைவனின் மாபெரும் கிருபையாலே.  அவரது கிருபை நமக்குப் போதும்.  கிருபையை அருளுகிற இறைவனின் தாள் பணிவோம்.   அவர் நல்லவர்.  நமக்கு நன்மை செய்கிறவர், நம்மை ஆசீர்வதிக்கிறவர்.  நம்மேல் பிரியம் கொண்டவர்.
கிருபைக் கடலாம் பரலோகப் பிதாவே, லோக ஆதாயச் சிந்தனைகளை விட நீர் எங்களை நேசிக்கிறீர் என்பதை உயர்வாக உணர்ந்து வாழ அருள் தாரும்.  இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன்.